குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
64 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-730-1.
இத்தொகுதியில் இடம்பெறும் நான்கு கிறிஸ்தவக் குறுங் கூத்துக்களும் இறைமகன் யேசு கூறிய உவமைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. இவை அடிப்படையில் பெருமளவில் எமது பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றான நாட்டுக்கூத்தினை அடித்தளமாகக்கொண்டு அமைக்கப்பட்டவை. எதிர்கொள்ளக் காத்திருத்தல், நல்ல மேய்ப்பர், உன் அயலவன் யார்?, உள்ளவனுக்குக் கொடுக்கப்படும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. உன் அயலவன் யார்?, நல்ல மேய்ப்பன் ஆகிய இரு நாடகங்களும் ஆண்டு 5க்கு உட்பட்ட மாணவர்களுக்கேற்றவகையில் எழுதப்பட்ட சிறுவர் கூத்துருக்கள். எதிர்கொள்ளக் காத்திருத்தல் என்ற நாடகம், யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் மறை ஆசிரியர்களாகப் பயிற்சிபெறுவோருக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது. உள்ளவனுக்குக் கொடுக்கப்படும் என்ற நான்காவது நாடகம் 02.08.1981 அன்று ஆசிரியரால் எழுதப்பட்டு, பிரான்சிஸ் ஜெனம் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டது. “எதிர் கொள்ளக் காத்திருத்தல்” என்ற தலைப்பில் முன்னர் யாழ்ப்பாணம், திருமறைக் கலாமன்றத்தினரின் வெளியீடாக, 1993இல் முதல் மூன்று நாடகங்களுடன் ஒரு பதிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலில், முன்னைய நூலுக்காக குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட முன்னுரையும் இடம்பெற்றுள்ளது.