முருகு தயாநிதி.சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2020. (சென்னை 600096: நவநீதம் அச்சகம்).
205 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-88972-47-5.
இலங்கையில் முருகவணக்கம் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் திருக்கோயில் சித்திரவேலாயுதர், கதிர்காமக் கந்தன், மண்டூர் முருகன், தாந்தாமலை முருகன், சித்தாண்டி முருகன், போரதீவு சித்திரவேலாயுதர், வெருகல் சித்திரவேலாயுதர் என்று பல இடங்களில் இவ்வழிபாடு நடக்கின்றது. இத்தகைய திருப்படைக் கோயில்களில் சூரசம்மாரக் கூத்தும் ஆடப்பட்டிருக்கின்றது. இக்கூத்தும் முருகனின் பெருமையைப் பேசுகின்றது. மட்டக்களப்பில் ஆடப்படுகின்ற வடமோடி-தென்மோடிக் கூத்துக்களில் இப்பிரதி வடமோடியில் அமைந்ததாகும். ஏட்டுப்பிரதியாக இருந்துவந்த சூரசம்மாரக் கூத்தினை ஆய்வுக்குட்படுத்தி ஆசிரியர் நூலுருவில் ஆவணப்படுத்தியிருக்கிறார். இது தமிழகத்தில் இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளையின் சொற்பொழிவு நூலாக வெளிவந்துள்ளது. ஆய்வுப் பதிப்புரை, கூத்தில் உள்ள பாத்திரங்கள், சூரசம்மாரக் கூத்து ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உசாத்துணை நூல்கள், பின்னிணைப்பு என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன. கலாநிதி முருகு தயாநிதி இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார்.