சின்னத்தம்பி சந்திரசேகரம். மட்டக்களப்பு: கலாநிதி சி. சந்திரசேகரம், முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: ஜெஸ்லியா அச்சகம்).
xiii, 370 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-5228-00-x.
மட்டக்களப்பின் கிராமங்களில் உடனுக்குடன் பாடல்களைக் கட்டிப் பாடவல்ல கிராமியப் புலவர்கள் பலர் ஆங்காங்கே வாழ்ந்திருக்கிறார்கள். எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக, அல்லது சற்று எழுத்தறிவை உடையவர்களாக விளங்கிய இவர்களை பாட்டுக் கட்டும் வாலாயம் மிக்கவர்கள் என்று மக்கள் கருதினர். இவர்கள் கிராமங்களில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் பற்றியும் உடனுக்குடன் பாடல்களைப் பாடி தமது கிராம மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். இந்நூலில் இத்தகைய கட்டுப் பாடல்களைப் பற்றியும், அவை எழுந்த சமூகச் சூழல் பற்றியும், அத்தகைய புலவர்கள் தொடர்பாகவும் விரிவான ஆய்வொன்றினை ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். இந்நூல் முன்னுரை, அணிந்துரை, சுருக்க விளக்கம், அறிமுகம் ஆகிய அறிமுகப் பக்கங்களைத் தொடர்ந்து ஆய்வுப் பிரச்சினைகள், கட்டுப் பாடல்கள் பற்றிய அறிமுகம், மட்டக்களப்பின் சமூக, பண்பாட்டுப் பின்புலமும் கட்டுப்பாடல்களின் உருவாக்கமும் வளர்ச்சியும், கட்டுப்பாடல்களின் ஆக்கமும் மொழியும், கட்டுப்பாடல்களின் பாடுபொருள், கட்டுப்பாடல்களின் அளிக்கையும் கலை அனுபவமும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக பாடல்களை ஆக்கியோர் பற்றிய விபரங்கள், கள ஆய்வில் தகவல் வழங்கியோரின் விபரங்கள் என்பன சேர்க்கப்பட்டுள்ளன.