இளையதம்பி சிவயோகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இளையதம்பி சிவயோகநாதன், 1வது பதிப்பு, மே 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
விஞ்ஞானப் பட்டதாரியான இந்நூலாசிரியர், அரச கூட்டுத் தாபனமொன்றின் ஓய்வுபெற்ற பிரதிப் பொது முகாமையாளராவார். 1984-1985 காலப்பகுதிகளில், வீரகேசரி வார வெளியீட்டில் பயில்வோர் பலகணி என்ற பகுதியையும், தினகரன் வார மஞ்சரியில் விஞ்ஞான அரங்கையும் முன்னர் “யோகன்” என்ற பெயரில் தொகுத்து வழங்கியவர். இந்நூலில் உலகளாவிய மக்களின் ஆழ்ந்த அனுபவத்தால் உருவாகிய வாய்மொழி இலக்கியமான பழமொழிகளையும், அறிவுரைகளையும் மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் தத்தம் வாழ்க்கைக்கு உதவும் வகையில் பழமொழிகள் வழக்கிலிருந்த நாடுகளின் அடிப்படையில் தொகுத்துத் தந்துள்ளார். அருள்மொழிகள், பொதுப் பழமொழிகள், அறிவுரைகள், உலக நாடுகளின் பழமொழிகள் என நான்கு பிரிவுகளின் கீழ் பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நாடுகளின் ரீதியாக பிரிக்கப்பட்ட பழமொழிகள் இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, அரேபியா, ஜப்பான், அமெரிக்கா, டென்மார்க், லத்தீன், ஸ்பெயின், இஸ்ரேல், ரஷ்யா, இந்தியா ஆகிய தலைப்புகளின் கீழ் இடம்பெற்றுள்ளன.