வி.இ.குகநாதன். லண்டன்: மக்கள் கலை பண்பாட்டுக் களம், 133, West End Road, Southall, UB1 1JF, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
எமது மொழியின் பெயர் தமிழ் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் ஏன் அவ்வாறு பெயர் பெற்றது? எப்போது முதல் அப்பெயர் பெற்றது? எம்மிடையே சாதி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் எப்போது முதல்? இவ்வாறு பொது மக்களிடையே தெரிந்தும் தெரியாமலிருக்கும் சிலவற்றையாவது தெளிவுபடுத்துவதே இந்த நூலின் நோக்கமாகும். குகநாதன் வரலாற்று ரீதியான ஆய்வு முறைமையின்படி நம்பகத்தன்மையான ஆதாரங்களின் அடிப்படியில் தன் கருத்தை வெளிப்படுத்தி வருபவர். இன்று சமூக அரசியல் தளங்களில் தமிழின் மீதான சிதைப்புக்களை இருட்டடிப்புக்களை அம்பலப்படுத்தி அதற்கெதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். வினவு, கீற்று, குளோபல் தமிழ் நியூஸ், இனியொரு, புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் தொடர்ந்தும் எழுதி வரும் இவரது இரண்டாவது நூலாக இத் தொகுப்பு நூல் அமைகின்றது. பல்வேறு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வெளியிட்ட கருத்துக்களினதும் அவர்களிடையே இன்றளவும் உலா வரும் விவாதங்களினதும் தொகுப்பாக, வெகு எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில்; இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலினை இவர் 5 படலங்கலாக எழுதியுள்ளார். தாய் மொழியான தமிழ், தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் மறைப்பும் தமிழ் சிதைப்பும், மதம் கொண்டஃகொன்ற தமிழ், தமிழும் சாதியும் ஆகிய தலைப்புக்களில் இவை அமைகின்றன. இதில் முதலாவது படலத்தில் எம்மொழியானது முதன்முதலில் எங்கு தமிழ் என்று குறிப்பிடப்படுகின்றது என்பதினை ஆதாரபூர்வமாக நிறுவி, பின் தமிழ் மொழியின் தோற்றம் குறித்தும் அதற்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணங்கள் குறித்தும் அறிஞர்களின் கருத்துக்களை தர்க்க ரீதியாக விளக்குகின்றார். இரண்டாவது படலத்தில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து விபரிக்கும் அவர் இந்நூலின் மூன்றாவது படலத்தில் தமிழ் மொழியைச் சிதைப்பதற்கும் அழிப்பதற்கும் முயற்சிக்கும் சக்திகள், குறிப்பாக – பார்ப்பன சக்திகளும் சமஸ்கிருத மொழியும் கடந்த 2000 வருடகாலமாக எவ்வாறு ஆக்ரோஷமாகவும் நுட்பமாகவும் தொழிற்பட்டன, இன்றும் எவ்வாறு தொழிற்படுகின்றன என்ற அதிர்ச்சி ஊட்டும் விபரங்களை விளக்கிச் செல்கிறார். நான்காவது படலத்தில் ஆரம்பத்தில் மத நீக்கம் செய்யப்பட்ட சமூகமாக விளங்கிய ஆதித் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு மதவாதக் கருத்துக்கள் புகுந்து கொண்டன என்ற வரலாற்று உண்மைகளை கூறிச் செல்கிறார். ஐந்தாவது படலத்தில் எமது இனத்தின் சாபக்கேடாகவும் கருப்பு வரலாறுகளாகவும் தொடரும் சாதீயம் எப்படி உள்நுழைந்தது என்பதினை ஆய்வு செய்கிறார்.