வேலுப்பிள்ளை அம்பிகைபாகன். யாழ்ப்பாணம்: சிவன் பவுண்டேஷன், ஆறுகால் மடம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
xxi, 61 பக்கம், 24 தகடுகள், விலை: ரூபா 500.00, அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-78680-0-4.
தேரின் கலைநுட்பம் தொழில் நுட்பம் என்பனவும் தேர் பற்றிய வரலாற்றுக் குறிப்பாக செல்வச் சந்நிதித் தேர் பற்றிய வரலாறும் இந்நூலில் பேசப்படுகின்றன. அத்தோடு தேர் அமைப்பின் பாணிகள், தேர்க் கலைஞர்கள், மரச்சிற்பங்களின் அழகியல், யாழ்ப்பாணத்துக் கட்டட சிற்பக் கலைப் பாரம்பரியம், பண்டைய மயிலிட்டியின் பெருமைகள், அங்கு அமைந்திருந்த தமிழ்ச் சங்கம் எனப் பல்வேறு தகவல்களையும் உட்பொதிவாகக் கொண்டுள்ளது. செல்வச் சந்நிதி ஆலயத்தில் 1984இல் உருவாக்கப்பட்ட கலைப்பெருந்தேர் 1986இல் இராணுவத்தால் எரியூட்டப்பட்டது. பின்னர் நிகழ்ந்த திருவிழாவில் பழைய கட்டுத் தேரிலேயே முருகன் வீதியுலா வந்தார். 2003ஆம் ஆண்டுத் திருவிழாவில் ஆலய மேற்கு வீதியில் தேர் உடைந்து முருகன் கீழே சரிந்தார். ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான பக்தர்களின் மனங்கள்; பதறித் துடித்தன. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக அரசின் ஆதரவுடன் ஒரு தேர் உருவாக்கம் பெற்றது. அதுவே 2004ஆகஸ்டில் வெள்ளோட்டம் கண்ட செல்வச்சந்நிதி முருகன் கலைத்தேர். இத் தேர் உருவாக்கத்தின் பல்வேறு பின்னணிகளை ஆராய்கிறது அம்பிகை பாகனின் இந்நூல், இத்தேர் உருவாக்கத்தின் ஊடாகவே ஜெயகாந்தன் என்கிற இளைய தேர்க்கலைச் சிற்பி உருவாகின்றார். அவரின் குடும்பப் பாரம்பரிய பின்னணி, கல்விப் பின்னணி, பயிற்சிப் பின்னணி என்பன பற்றி எல்லாம் இந்நூல் பேசுகின்றது. அவர் ஆசாரமான புகழ்பெற்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரே தமிழக பாணியும் யாழ்ப்பாண பாணியும் கலந்தமைந்த புதியதோர் பாணியில் கலைத் தேரை உருவாக்குகின்றார். இவரின் பாரம்பரிய குடும்பப் பின்னணியில் பல உண்மைகள் புதையுண்டு கிடக்கின்றன. இராஜசிற்பி சங்கிலித் தவிண்டையர் அவற்றிலொன்று. மயிலிட்டியில் இயங்கிய தமிழ்ச் சங்கம் பற்றிய செய்திகள் இன்னொன்று இப்படி புதையுண்டு கிடக்கும் ஏராளமான புதிய செய்திகள், தகவல்கள் அம்பிகைபாகனின் இந்நூலினால் வெளிச்சம் பெறுகின்றன. அற்புதமான மரச்சிற்பங்களை வடித்த கலைஞர்களை இந்நூல் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டுகிறது.
மேலும் பார்க்க: கலைச் சுவடுகள்.15522