செ.யோகநாதன். சென்னை: செ.யோகநாதன், 1வது பதிப்பு, 1985. (சென்னை: தமிழோசை அச்சகம்).
520 பக்கம், சித்திரங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×13 சமீ.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கண்டியில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். மார்க்சிய சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், 1980களில் தமிழ்நாடு சென்று அங்கு பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து 1996 இல் இலங்கை திரும்பினார். இவர் தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் குழந்தைகள் கலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்டது. இத்தொகுப்பில் 171 கதைகள் அடங்கியுள்ளன. ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், இன்னும் உலகில் வழங்கிவரும் பல கதைகளை எளிய நடையில் சுவையாக எடுத்துக் கூறியுள்ளார். உயிரோட்டமுள்ள வண்ணச் சித்திரங்களையும் இணைத்துள்ளார். சித்திரங்களை அமுதோன், மணியன் செல்வன், இராமுசுந்தர் ஆகியோர் வரைந்துள்ளனர். செ.யோகநாதன் நாடு திரும்பியபின்னர் கொழும்பில் உள்ள எம். டி. குணசேனா நிறுவனம் தமிழ் நூல்கள் வெளியிடத் தொடங்கிய போது அதற்குப் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார். யோகநாதன் இந்திய மத்திய அரசின் பரிசு உட்பட தமிழக அரசின் விருதினை நான்கு தடவைகள் பெற்றுள்ளார். உயர் இலக்கிய விருதான இலக்கியச் சிந்தனை விருதினையும் நான்கு தடவைகள் பெற்றுள்ளார். இலங்கை சாகித்திய விருது நான்கு தடவை கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோகநாதன் அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17728).