பியதாச வெலிகண்ணகே (சிங்கள மூலம்), மலரன்பன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(19), 184 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-30-5618-4.
பியதாச வெலி கண்ணகே எழுதிய ‘அவன் ஓர் அபூர்வ சிறுவன்’ என்ற சாகித்திய பரிசு பெற்ற சிங்கள நாவல் இது. இந் நாவல் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பதாக, 1942ஆம் ஆண்டை சார்ந்த காலப்பகுதிக்குரியதாகும். இக் கதை இடம் பெறுவது மலையக பகுதிகளில் ஒன்றான பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள பசறை நகருக்கு அருகில் அமைந்துள்ள பின்னலகந்த சிங்கள கிராமமொன்றிலாகும். இந் நாவல் தோட்ட சூழ்நிலைகளை அங்குமிங்கும் தொட்டு செல்வதாக அமைந்துள்ளது. பின்னலகந்த என்ற கிராமத்திலிருந்து எல்டொப் தோட்டத்தை கடந்து 7மைல் தூரத்திலேயே பசறை அமைந்திருக்கின்றது. மலையக சிங்கள கிராமம் ஒன்றில் மிக மிக வறுமையான குடும்பத்தில் பிறந்த அப்புகாமி என்ற சிறுவன் தனது ஆரம்ப பள்ளிக்கூட வாழ்க்கையை தொடங்கியதிலிருந்து 10ம் தர வகுப்பு வரை தனது கல்வியை தொடர்கின்ற போது ஏற்பட்ட தடைகள் மற்றும் இடையூறுகளை சொல்லுகின்ற சிறுவனின் சுயசரிதையே இந் நாவல். அவனுடைய ஏடு தொடங்குதலில் ஆரம்பித்து பக்கத்து கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்க தொடங்கியமை, அவனுக்கு பிறப்பிலேயே அமைந்திருந்த திறமை, அதிக ஞாபக சக்தி என்பவை அவனை ஏனைய மாணவர்களிருந்த வேறுபடுத்தி காட்டி தலைமையாசிரியரின் கவனத்திற்கு அவனை உட்படுத்துகின்றது. அவனுடைய கல்வி செயற்பாட்டிற்கு எதிரியாக அமைந்தமை அவனுடைய குடும்பத்தின் வறுமையும் குடும்பத்தின் மேல் எவ்விதமான அக்கறையும் அற்று கிடைத்த சொற்ப வருமானத்தை முழுமையாக சூதாட்டத்துக்கு செலவழிக்கின்ற அப்பா ஏனைய குடும்பங்களின சொந்தபந்தங்களின் ஆதரவற்ற நிலை என்பவையாகும். உழைக்கக்கூடிய அம்மாவுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்தமை அவனுடைய கல்வியை தொடங்குவதற்கு அம்மாவின் ஆர்வமும் இவனது திறமையை அவதானித்த தலைமையாசிரியர் இவன் மேல் காட்டுகின்ற அரவணைப்புமே காரணமாக அமைகின்றது. கொஸ்லந்த மீரியபெத்தையில் இடம் பெற்ற மண்சரிவு சர்வதேச முக்கியதுவத்தை பெற்றுள்ளது. இந் நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ள இம் மண்சரிவு நிகழ்வுகள் தோட்டப்புறங்களில் 1942களில் பசறை எல்டொப் 1966இல் அப்புத்தளை பெரகல 2014இல் மீரியபெத்தை என ஒரு தொடர்கதையாகவே அமைந்துள்ளது.