அஹமது ஃபைசல். பொத்துவில் 21: பட்டாம்பூச்சிகள் கலை இலக்கிய பரண், சுல்தான் ஹாஜியார ; வீதி, ஹிதாயபுரம், 1வது பதிப்பு, ஜீலை 2019. (சாய்ந்தமருது: எக்செல்லென்ட் பிரின்ட்).
86 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5133-00-0.
‘இயற்கையில் தினந்தோறும், கணந்தோறும் என்னவெல்லாமோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு விதை துளிர் விடுவதைப் பார்க்கும் வெறும் வானம், அது இலைகள் விட்டுக் கிளைகள் விட்டு செடியாய் மரமாய் வளர்ந்து விடும் முன், நீரை உறிஞ்சி வரும்படி சூரியனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சூரியனும் மேகமும் பேசுவதைக் கவிஞன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அந்தப் பூடக மொழி கவிஞனுக்கே புரிகிறது. இயற்கை, வானம், மழை போன்ற மானுடப் படைப்பல்லாத, சமூக அமைப்பிற்கு அந்நியமான பொருட்களை மட்டும்தான் கவிதைக்குள் கொண்டு வருகிறாரா அஹமது ஃபைசல் என்றால், அல்ல. நிலத்தையும் வெளியையும் இணைப்பது மானுட வாழ்வு என்பதைப் புரிந்தவராகவே அவர் இருக்கிறார்;. வெற்று வாசிப்புச் சுகம் மட்டுமல்லாது வாழ்க்கை குறித்த விசாரணையும், கவலையும், கரிசனமும் அடங்கிய கவிதைகள் இவை. மிக விஸ்தாரமான வாழ்வனுபவம் சொட்டும் நல்ல தொகுப்பு இது’. (கலாப்ரியா, நூல் அறிமுகம்). அஹமது ஃபைசல் வழங்கியுள்ள ஐந்தாவது நூல் இது. கவிதைப் பரப்பில் பின்னவீனத்துவ எழுத்துக்களால் அறியப்பட்ட இப்படைப்பாளி, உற்சாகத்தையும் வாசிப்பனுபவத்தையும் தரும் சர்ரியலிசக் கவிதைகளை வாசகருக்குத் தன் எழுத்துக்களின் வாயிலாகத் தந்து வருகிறார்.