வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
(6), viii, 82 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4041-19-6.
மைக்கல் கொலினின் கவிதைகள் கடந்த கால யுத்த அவலங்களை பேசுகிறது. அவரது சமூகம் சார்ந்த கவிதைகளிலும் தன்னுணர்ச்சிக் கவிதைகளிலும் இதனைக் காணலாம். ஒரு பத்திரிக்கையாளராக, சஞ்சிகையாளராக சிறுகதையாளராக, கவிஞராக அறியப் பட்ட இவரது ‘மகுடம் கலை இலக்கியக் காலாண்டிதழ்’ ஈழத்தின் கவன ஈர்ப்புப் பெற்ற இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருகிறது. கவிதை என்பது சொற்களின் விளையாட்டு. சரியான இடத்தில் சரியான சொற்களை அமைக்கத் தெரிந்தவனே உண்மைக்கவிஞன். கவிதையைப் போலவே புதிய புதிய சொற்களை படைக்கத்தெரிந்த கவிஞன் சிறந்த கவிஞனாகி விடுகிறான். அந்த வகையில் மைக்கல் கொலினின் கவிதைகளில் புதிய சொற்களின் அணிவகுப்பைக் காண்கிறோம். அவை உரிய இடத்தில் உரிய கருத்துக்களை தரும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். தனிமனித உணர்வுகளுடன் சமூக சிந்தனையையும் இணைத்த அவரது சமகால வாழ்வியலைக் கூறும் கவிதைகள் நிச்சயம் பேசப்படும். அவ்வகையில் மைக்கல் கொலின் எழுதிய 48 கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது. இத்தொகுப்பிலுள்ள கணிசமான கவிதைகள் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து முடிந்து ஒய்வெடுக்கும் போர்க்கால வாழ்வியலுடன் தொடர்புபட்டவை. கிழக்கின் போர்க்கால வாழ்வை-வரலாற்றை கவிதை வடிவத்தில் ஆவணப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஈழத்துக் கவிஞர்களுள் வாழ்வின் இருப்பு, தேடல் என்பன பற்றிப் பாடுகின்ற புதிய தலைமுறைக் கவிஞர்கள் ஒரு சிலரே. இத்தொகுப்பிலும் அத்தகைய கவிதைகள் இருப்பது இத்தொகுப்பின் மற்றொரு முக்கியத்துவமாகும். இது 24ஆவது மகுடம் பதிப்பக வெளியீடு.