15595 முதுவேனில் பதிகம்.

திருமாவளவன் (இயற்பெயர்: கனகசிங்கம் கருணாகரன்). கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, யூலை, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 110 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 14×21.5 சமீ.

கவிஞர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானில் 1955இல் பிறந்தவர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டடத் தொழில்நுட்ப மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். 1990களில் பும்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசித்து வருகிறார். அங்கு ‘ழகரம்’ என்ற சிற்றிதழில் 1996-1997 காலப்பகுதியில் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பத்தி எழுத்தாளராகவும் அறியப்பட்ட இவரது நான்காவது கவிதைத் தொகுதி இதுவாகும். முன்னதாக பனிவயல் உழவு (2000), அ/தே பகல் அ/தே இரவு (2003), இருள்-யாழி (2008) ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். ‘திருமாவளவனின் கவிதைகள் இயற்கையுடன் தம்மை இணைத்துச் சமநிலைகாண முற்படுகின்றன. அல்லது, இயற்கையில் தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்கின்றன. இயற்கை மீதான திருமாவளவனின் பிரியம் அவரைச் சமநிலைப்படுத்தி புதுப்பித்து, உயிர்ப்பூட்டி மேலும் விசையுடன், வேகத்துடன் இயங்கவைக்கிறது. பிரிவின் ஆற்றாமையினாலும் வேறுபட்ட நிலங்களின், அங்குள்ள நிலைமைகளின் ஒவ்வாமையினாலும் கொந்தளிக்கும் மனதைச் சமநிலைப்படுத்துவதற்கும் இயற்கையே அவருக்கு பேராறுதலாகவுள்ளது என்பதால் மனிதர்களைப் பற்றிய சித்திரங்களை விடவும் இயற்கை பற்றிய சித்திரங்கள் இந்தக் கவிதைகளில் அதிகமாக உள்ளன’ என இந்நூலுக்கான அணிந்துரையில் கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்