மஜீத். அக்கரைப்பற்று: குருதி வெளியீடு, ஞானமடம், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(5), 40 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 22×15.5 சமீ.
மஜீதின் கவிதைகளால் நிரப்பப்பட்ட உலகம் மிக விசித்திரமானது. எங்கும் வியாபித்திருக்கின்ற அழகியல் கூறுகளிலிருந்து கவிதைகளை நுகர முயற்சிக்கலாம். அத்துமீறிய உணர்வுகளின் மெல்லிய வெளிச்சத்திலிருந்து மஜீதின் கவிதைக்கான வேர்கள் நடப்பட்டிருப்பதாக நம்புகிறேன். மஜீத் காத்திரமான கவிஞன் என ஒற்றை வார்த்தையில் சொல்வதை விடவும், அவனது கவிதைகள் பேசிச் சென்ற விடுதலையின் உரத்த குரல் வசீகரமானது. மஜீதின் படைப்புக்கள் விடுதலையினை வேண்டி நிற்கும் சனத்திரளை நோக்கி விடப்படுகின்ற ஓராயிரம் கேள்விகளின் பின்னால் தஞ்சம் புகுந்திருந்ததினை மறுக்கவியலாது. காலத்தினை நோக்கி வெகு சீக்கிரமாகப் பாய்ந்து விடும் பிரதிகளின் வழியே மஜீதின் எழுத்துக்கள் முளைத்திருந்தன. மாமூலான இருப்புக்களைத் தாண்டி வெளிப்படைத் தன்மையில் இயங்குகின்ற பரீட்சார்த்த முறைமைகளை, நிலைமைக்கு ஏற்றவாறு பிரதிகள் உருவாக்கிக் கொண்ட சூழலில் மஜீதின் கவிதைகள் தனியொரு பரப்பில் விசாலமாய் கிடந்தன. மஜீதின் பிரதிகள் காலத்தின் நிழலாகவும், நிகழ்வுகளின் தலையீடாகவும் எம்முன் விரிவடைந்தது. யதார்த்தங்களின் பார்வைக் கோட்டிலிருந்து விடுபட நினைத்து, பிரபஞ்சம் தாண்டிய, அல்லது யதார்த்தங்களை மீறிச் செயற்படுகின்ற பிரதி வெளிக்குள் மஜீதின் சொற்கள் ஓய்வடையாமல் இயங்கிக் கொண்டிருந்தவை. எவ்வாறு இம்முறையினை அணுகி, இலக்கிய தளத்தினை புரிந்து கொள்வது எனும் குழப்பத்தில் இவ்வெளியினை விட்டு அகன்றோடியவர்கள்தான் அதிகம். எவ்வளவு புயல் வீசிய போதும், சுழியினில் அகப்படாமல், தங்களை பாதுகாத்துக் கொண்டு பிரதிகளின் ஊடாக எம்முன் உரையாடத் தொடங்கிய தளத்தினை, எமது சூழலில் ஒரு சிலரே முன் வைத்தனர். ‘எந்தப் பதிலுக்குப் பின்னேயும் ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிட்டால் அது கேள்வியாகவே மாறிவிடும். ஆகவே பதில்கள் கூட கேள்வியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முயற்சிதான்’ எனக் கூறும் மஜீத் அற்புத மொழிகளின் கூட்டுக்காரன். ஒரு இலையின் மரணம் போல அவனது வாழ்வு முடிந்தாயிற்று. ஆயினும் அவனது மொழியும், புதுமையும், கவிதைகளும் புதியதொரு உலகமாய் எம்முன்னே எப்பொழுதும் விரிந்து கொண்டேயிருக்கும் (ஏ. எம். சாஜித் அஹமட்)