து.வி.ராஜ்பிரசாத் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: துரைவி பதிப்பகம், 85, இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(7), 8-184 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-3915-00-9.
துரை விஸ்வநாதன், (28.02.1931 – 21.12.1998) ஈழத்தில் ஒரு தொழில் அதிபராகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர். நல்லதொரு கலை இலக்கிய ரசிகராக மட்டுமின்றி, தனது உழைப்பால் துரைவி என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் அமைத்து பல தமிழ் நூல்களை வெளியிட்டதோடு, பல வழிகளிலும் ஈழத்து கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்தவர். 2001-2016 காலகட்டத்தில் இடம்பெற்ற அவரது நினைவுப் பேருரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ‘20ஆம் நூற்றாண்டில் மலையகத் தமிழர்கள்: சில மீளாய்வுக் குறிப்புகள்’ (சோ.சந்திரசேகரம், 2001), ‘இந்திய வம்சாவளித் தமிழர்களும் தாயக உரிமைகளும்: சில கோட்பாட்டுச் சிந்தனைகள்’ (பி.பி.தேவராஜ், 2004), ‘மலையக நாவல் இலக்கியம் – தோற்றம் வளர்ச்சி’ (தெளிவத்தை ஜோசப், 2005), ‘ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியம் படைக்கும் ஈழத் தமிழர்’ (கே.எஸ்.சிவகுமார், 2007), ‘சாதிய சமூகத்தில் மார்க்சியம்’ (ந.இரவீந்திரன், 2009), ‘முற்போக்கு இலக்கிய நெருக்கடிகளும் முன்போதலுக்கான மார்க்கங்களும்’ (பிரேம்ஜி ஞானசுந்தரம், 2012), ‘இணையத்தில் இலக்கியம்’ (எம்.எஸ்.தேவகௌரி, 2014), ‘தற்கால மலையக புனைவு இலக்கியத்தின் பண்புகள் பற்றிய ஓர் அவதானிப்பு’, ‘பெண்மையின் கட்டமைப்பும் அதன் நீட்சியாக அண்மையின் அனுகூல அதிகார ஆட்சியும்-ஓர் உளவியல் நோக்கு’ (செல்வி திருச்சந்திரன், 2016) ஆகிய தலைப்புகளில் வழங்கப்பட்ட நினைவுப் பேருரைகள் இவை.