வைகுந்தம் கணேசபிள்ளை. யாழ்ப்பாணம்: திருநெறிய தமிழ் மறைக் கழகம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
xxii, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத் தமிழாகும். இணுவில் கிராமத்தில் எழுந்த பிள்ளைத் தமிழ் பிரபந்தங்களில் மூன்றாவது இடத்தினை இந்நூல் வகிப்பதாக வெளியீட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற சிவகாமி அம்மன் பிள்ளைத் தமிழ், இரண்டாவது கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களால் எழுதப்பட்ட இணுவை செகராசசேகரப் பிள்ளையார், இணுவை முருகன் பிள்ளைத் தமிழ்களைத் தொடர்ந்து பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை அவர்களால் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் மேல் எழுதப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல் வெளிவருகின்றது. இந்நூலில் இணுவை ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் மீது பாடப்பெற்ற பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் ஆகிய பத்துப் பருவங்களில் பாடப்பட்டுள்ளது. இதில் ஆலயத் தொண்டர்களின் பணிகள், பிடியரிசித் தொண்டு, பிள்ளையார் மேல் பாடிய பிற பிரபந்தங்கள், இணுவில் கிராமத்தை அலங்கரித்த புலவர் பெருமக்கள், இணுவில் விநாயகர் ஆலயங்கள் ஆகியன சுட்டிக் காட்டப்படுகின்றன.