க.சி.குலரத்தினம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: க.கனகராசா, மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம், த.பெ.எண் 77, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
28 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×12 சமீ.
ஒன்பது கிரகங்களுள் சனி பகவானும் ஒருவர். நவக்கிரகங்கள் வரிசையில் அவரும் வழிபாட்டுக்குரியவர். சூரியனைப் போல அவரும் தனி வழிபாட்டுக்கும் உரியவர். ஆலயங்களில் நவக்கிரகக் கூட்டத்திலும், தனியாகவும் சனிபகவானுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. சைவாகமங்கள் சனி பகவானைப் பற்றி அதிகமாகக் கூறுகின்றன. அவர் கருநிறத்தவர், கரிய ஆடையினர், குறுகிய உருவத்தவர், ஒரு கால் ஊனமுற்றவர், கருமலரையும் நீல மலர் மாலையையுஞ் சூடுபவர், வில்லைப் போன்ற ஆசனத்தில் வீற்றிருப்பவர். சூலமும் வில்லும் தரித்த திருக்கரங்களோடு அபயம் வரதம் ஆகிய திருக்கரங்களையும் உடையவர். கழுகை வாகனமாக உடையவர். தமிழ்நாட்டவர் பலர் சனி பகவானுக்குப் பலவித தோத்திரங்கள், கவசங்கள், துதிகள் பாடியிருக்கிறார்கள். அவர்கள் பொதுவாகச் சனி பகவானுக்குரிய வாகனம் காகம் எனவே கூறுவர்.