ஆறுதிருமுருகன் (மலர்க்குழுத் தலைவர்), இளஞ்சேய் வேந்தனார் (மலர்க்குழு ஒருங்கிணைப்பாளர்). கொழும்பு: பழைய மாணவர் சங்கம் – கொழும்புக் கிளை, பரமேஸ்வராக் கல்லூரி, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 249 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-624-6289-00-3.
சேர் பொன். இராமநாதனால் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி 1974இல் அரசினால் கையகப்படுத்தப்பட்டு யாழ். பல்கலைக்கழகமாக உருமாற்றம் செய்யப்பட்டது. இழந்த பரமேஸ்வரா கல்லூரியின் பெயரில் ஒரு பாடசாலையும் நிறுவப்படாத நிலையில் அப்பாடசாலையின் வரலாற்றை நினைவுறுத்தும் வகையில் 2006இல் பரமேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஒன்று தாபிக்கப்பட்டது. திருநெல்வேலியில் இயங்கிவந்த இந்து தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையை ‘பரமேசுவரா வித்தியாலயம்” எனப் பெயர்மாற்றம் செய்து இராமநாதன் நினைவு தினமான 19.11.2011 அன்று பெருவிழாவாகக் கொண்டாடினர். இந்நிலையில் பரமேஸ்வரா கல்லூரியின் நூற்றாண்டு நினைவு ஆண்டில், அக்கல்லூரியின் வரலாற்றை ஆவணப்படத்தும் நோக்கில் இந்நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், கல்லூரி வரலாறு பற்றிய கட்டுரைகள் (ஆறு திருமுருகன், க.சி.குலரத்தினம், மைதிலி விசாகரூபன், பொன். பாலசுந்தரம்பிள்ளை, சேர்.பொன் இராமநாதன், ரீ.பேரின்பநாயகம்ச.சிவலோகநாதன்), தாபகர் பொன் இராமநாதன் பற்றிய கட்டுரைகள் (சி.க.சிற்றம்பலம், செல்வநாயகி ஸ்ரீதாஸ், செ.திருநாவுக்கரசு, கிருஷ்ணானந்தசிவம், ப.சந்திரசேகரன், வித்துவான் வேந்தனார், ச.சிவலோகநாதன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை) கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களின் அனுபவங்கள் (க.சி.குலரத்தினம், வி.சிவசாமி, செ.சண்முகலிங்கம், கலையரசி சின்னையா, பரமேஸ்வரா ஐயர் அம்பிகாபதி, ச.சிவலோகநாதன், ச.சர்வானந்தன், கே.மகேந்திரன், இரத்தினசிங்கம் ஆசிரியர், லோகநாயகி பத்மநாதன், லண்டன் அம்பி, மு.சி.சிவபாதசுந்தரம்), கல்லூரி பல்கலைக்கழகமாகுதல் (ரி.பேரின்பநாயகம்), பரமேஸ்வரா வித்தியாலயம்- பெயர் மாற்றம் (ப.மா.ச. கொழும்பு, கனக நமநாதன், நல்லையா விஜயசுந்தரம், யோகராசா தயாளன்) ஆகிய பிரிவுகளின் கீழ் பிரமுகர்களால் எழுதப்பட்ட ஆக்கங்கள் என நிறைந்த நினைவுப் பதிகைகளுடன் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.