யாழ்ப்பாணம் : பாலர் பகல் விடுதியும் மன்பள்ளியும், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், கஸ்தூரியார் வீதி).
xlvi, 72 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
நீர்வேலி பாலர் பகல் விடுதியும் முன்பள்ளியும் (Creche and Pre School) கடந்த 17.09.2016 அன்று தனது வைர விழாவைக் கொண்டாடியிருந்தது. அவ்வேளை வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். சமூகத்திற்கு பொருத்தப்பாடுடைய அறிவுசார்ந்த ஆற்றலுள்ள நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்குடன் அமரர்களான சேர். கந்தையா வைத்தியநாதன், இ.க.சண்முகநாதன் ஆகியோர் வித்திட்டு நீரூற்றி வளர்த்த இந்த சமூக அமைப்பு தனது வளர்ச்சிப் பாதையை இம்மலரின் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. அம்முயற்றியுடன் கூடவே பயனுள்ள சில கட்டுரைகளையும் இடம்பெறச் செய்துள்ளனர். அவை சமுதாய வளர்ச்சியில் பாலர் பகல் விடுதியின் பங்களிப்பு (திருமதி ஞா.தெய்வேந்திரராசா), முன்பள்ளிப் பிள்ளைகளிடையே கணித எண்ணக்கருக்களை விருத்தி செய்தல் (த.கலாமணி), முன்பள்ளிகளில் சுற்றாடல் கல்வியின் முக்கியத்துவம் (செல்வி ஜெயா தம்பையா), முன்பள்ளிகளில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு விளையாட்டுகள் (செல்வி நிர்மலா கந்தையா), முன்பள்ளிப் பராயக் கல்வியும் நவீன ஒன்றிணைந்த அணுகுமுறைப் பிரயோகங்களும் (பா.தனபாலன்), முன்பள்ளிகளின் வினைத்திறனுள்ள செயற்பாட்டிற்கான பொதுமைப்படுத்தப்பட்ட குழந்தைக் கலைத்திட்டத்தின் தேவை (பொ.சற்குணநாதன்), மழலைகளின் வளர்ச்சியில் கணனியின் செல்வாக்கு (பா.சசிகுமார்) ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.