ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (மூலம்), தி.செல்வமனோகரன், சி.ரமணராஜா (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 3வது பதிப்பு, மார்கழி 2022, 1வது பதிப்பு, 1925, 2வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xvi, 288 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-624-5911-18-9.
சொற்பொருள் விளக்கம் எனும் தமிழகராதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை வித்தியாவிருத்தித் தருமாலய கர்த்தரும் பிரபல சோதிட கணித சித்தாந்தியுமாகிய பிரமஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகளால் புதிதாய் எழுதி அச்சிடப்பட்ட பிரதிக்கிணங்க, இக்காலத்துக்கியைந்தனவாகக் கூட்டியும் மாற்றியும் அவர்கள் எழுதிவைத்த சில சொற்களையுஞ் சேர்த்து, அவர் சகோதரர் பிரமஸ்ரீ ச.சோமசுந்தரஐயரால் வித்தியாவிருத்தித் தருமாலய வெளியீடாக இரண்டாவது பதிப்பு, 1960இல் பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு இம் மீள்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரமஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகளின் சமயம், சோதிடம், சமஸ்கிருதம், பதிப்புப் பணிகளுடன் இணைந்து முதன்மைப்படுத்தத்தக்க பணியாக சொற்பொருள் விளக்கம் எனும் அகராதிப்பணி அமைந்துள்ளது. இரு மொழிப் புலமைமிக்க இவர் தமிழ்ச் சொற்கள், தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்கள் என்பவற்றுக்கு பொருள் விளக்கம் தரத்தக்க, ஒத்த பொருட்களை, ஒரு சொல் பல பொருள்களைக் கொண்டதாக இக்கையடக்க அகராதியை உருவாக்கியுள்ளார். உரிய வகையில் எழுத்தின் அளவைப் பயன்படுத்தியுள்ளார். அகராதி என்பதை ‘அகரமுதலாக (எழுத்துமுறையே) நிரைக்கப்படுஞ் சொற்கோவை” எனப் பொருண்நிலைப்படுத்துகின்றார். ஈழத்தமிழரின் அகராதியாக்க வரலாற்றில் இவ்வகராதிக்குத் தனி இடமுண்டு.