முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்., கலைமகள் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 10: எஸ். அன்ட் எஸ். பிரின்டர்ஸ், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).
xviii, 154 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-0280-04-9.
முல்லை முஸ்ரிபா இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்றில் பிறந்தவர். மர்கூம்களான முஹம்மது முஸ்தபா, ஸரிபா உம்மா தம்பதியின் இளைய புத்திரர். 2002 இல் இளம் படைப்பாளிக்கான கௌரவ விருது, 2004 இல் தேசிய சாகித்திய விருது, 2004 இல் வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, 2006 இல் வன்னிச் சான்றோர் விருது, 2010 இல் கொடகே தேசிய விருது, தேசிய சாகித்திய சான்றிதழ், வடமாகாண இலக்கிய விருது ஆகியவற்றையும், 2011 இல் யாழ் முஸ்லிம் இணையத் தளத்தின் மூத்த படைப்பாளிக்கான சிறப்பு விருது ஆகியவற்றையும் கவிஞர் முல்லை முஸ்ரிபா பெற்றுள்ளார். இவரது முதல் கவிதை நூல் “இருத்தலுக்கான அழைப்பு” என்பதாகும். இந்த நூல் 2003 இல் வெளிவந்தது. மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக, பத்தி எழுத்தாளராக, கவிதைத் திறனாய்வாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள “மீதம்” என்ற கவிதை க.பொ.த. சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது. இந்நூல் பற்றி அவர் விபரிக்கும்போது, “மனசு மௌனத்துள் உறைந்து சொற்கள் விறைத்துப் போகும்போது சிலபோது மனசு பூவின் இதழொன்றால் வருடப்படும் போது அல்லது குளிர்நீரின் ஒரு துளியால் தழுவப்படும்போது என் சொற்களுக்குச் சிறகு முளைக்கிறது. சிறகு முளைக்கும் சொற்களை அவ்வப்போது பறக்கவிட்டு வந்திருக்கிறேன். எனது பறத்தல் என்பது மானுட நேயத்தைத் தேடியலைதலும் விட்டு விடுதலையாகி நிற்கும் துடிப்பும் தான். வரண்ட வெளிகளிலெல்லாம் நீள்கிற எனது பறத்தலில் மனிதம் வற்றிப்போகாத ஒரு சிறு நீர்க் குழியில் என் குருவி சிறகுகளை ஒடுக்கி கீழ் அமர்ந்து நீரருந்த அவாவுகிறது. அந்த அவாவுதல் தீரா விடாயாய் மேலும் நீள்கிறது. ஆதலால் எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல் தொடர்ந்தும் நிகழ்கிறது” என்கிறார் ஆசிரியர்.