கவிதா. சென்னை 600 005: புதுப்புனல், பாத்திமா டவர்-முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை (ரத்னா கபே எதிரில்), 1வது பதிப்பு, 2012. (சென்னை 2: ஜே.எம். பிராசஸ்).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-924508-0-3.
நோர்வேயில் வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த கவிதா (கவிதா லட்சுமி) ஆளுமை மிக்க ஒரு நடன ஆசிரியராகவும் கவிஞராகவும் அறியப்பட்டவர். ஏற்கனவே ”பனிபடலத் தாமரை”, ‘என் ஏதேன் தோட்டம்”, ”தொட்டிப்பூ” ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ‘கறுத்த பெண்” இவரது நான்காவது கவிதைத் தொகுதி. கறுத்த பெண் தொகுப்பில் 55 கவிதைகள் பதிவாகியுள்ளன. தமிழ்ச் சூழலின், குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சூழலில் பெண்களின் நிலை பற்றிய கேள்விகளை இந்நூல் எழுப்புகின்றது. பெண்களின் சமூக இருப்பு பற்றிய கூர்மையான கருத்துகள், விமர்சனங்கள், தேடல்கள் கவிதைகளில் விரவிக்கிடக்கின்றன. கவிதாவினுடைய கவிதைகள் சொந்த உணர்வுகள், வாழ்வனுபவங்களின் பிரதிபலிப்பு என்பதற்கும் அப்பால், சக மனிதர்களின், சமூகத்தின் வாழ்வனுபவங்களையும் உள்வாங்கி, சமூக நிலைப்பட்ட பொதுத்தன்மைக்குரிய பரிமாணத்தினைக் கொண்டுள்ளது. இவரது கவிதைகள் பெண்கள் மீது கலாச்சாரம், பண்பாடு, சடங்குகள், விழுமியங்கள் போன்ற போர்வையில் திருமணம், குடும்பம், சமூகம் ஆகிய நிறுவனமயப்பட்ட தளங்களில் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் பற்றிய கேள்விகளை முன்வைக்கின்றன. அத்தோடு தம்மீதான சமூக அழுத்தங்களைக் களைந்து, சுதந்திரமாக சிந்திக்க, பேச, விவாதிக்க முனைகின்ற பெண்களின் வேணவாக் குரலாகவும் பல கவிதைகளை நோக்க முடிகின்றது.