என்.எம்.சஜாத். வவுனியா: என்.எம்.சஜாத், அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா பிரதேசச் செயலகம், 1வது பதிப்பு, 2021. (வவுனியா: ஜீ.எச். அச்சுப் பதிப்பகம், இல.13/1, 1ஆம் ஒழுங்கை, பட்டாணிச்சூர்).
xxii, 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-624-96952-0-7.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான யுத்தங்கள் நடைபெற்றபோதும் உலக மகா யுத்தங்கள் என்ற வரையறைக்குள் அடக்கப்பட்டவை 1914-1918இல் நிகழ்ந்த முதலாம் உலக யுத்தமும் 1939-1945 காலகட்டத்தில் நிகழ்ந்த இரண்டாம் உலக யுத்தமுமாகும். இவை இரண்டும் ஐரோப்பாக் கண்டத்தில் உருவானபோதிலும் கடல் கடந்து சகல கண்டங்களும் இந்த யுத்தத்தில் பங்கேற்றதால் உலகயுத்தம் எனப் பெயர் பெற்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக ஈழத்திலும் உரிமைக்காக நடந்த யுத்தத்தில் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்தமையாலும் இதற்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகள் பலவும் கைகோர்த்து நின்றமையாலும் இதனையும் உலகமகா யுத்தம் எனக்காண்கிறார் இக் கவிஞர். கடந்த 2019லும் கத்தியின்றி இரத்தமின்றி சத்தம் இன்றி அமெரிக்க வல்லரசு உள்ளிட்ட உலக நாடுகளையே அதிரவைத்த கொரோனா என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலினால் இலட்சக் கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட அதற்கு எதிரான தற்காப்புப் போரில் உலகமே ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு நின்றமையால் இதனையும் ஆசிரியர் உலகமகா யுத்தமாகக் காண்கிறார். இந்நூலிலுள்ள கவிதைகள் இவ்விரண்டையும் தொட்டுச் செல்கின்றன. ஏற்கெனவே முகநூலில் பதிவுசெய்யப்பட்ட இக்கவிதைகள் தற்போது நூலுருவிலும் வெளிவந்துள்ளது. ”உமைப்பாட மாட்டேனா” என்ற கவிதை தொடங்கி ”என்ன நினைத்தாள்” என்ற கவிதை ஈறாக மொத்தம் 35 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். வவுனியா பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார்.