16583 வானும் மண்ணும் நம் வசமே: தன்முனைக் கவிதைகள்.

நஸீரா எஸ்.ஆப்தீன். ஏறாவூர்: புத்தொளி வெளியீடு, பழைய தபாலக வீதி, ஓட்டமாவடி-01, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு).

xiii, 90 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-96068-1-4.

இலங்கைக் கல்வித்துறையில் ஆசிரியராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர் நஸீறாஆப்தீன். புதிய இலக்கிய வடிவங்களைத் தேடிக் கற்பதிலும் ஆய்வு செய்வதிலும் ஆர்வமுடைய இவர், தமிழில் புதுவரவுப் பாவாக அறியப்பெற்ற ஜப்பானிய ஹைக்கூவைக் கற்று அதுபற்றிய தனது குறிப்புக்களை “ஹைக்கூவில் கரைவோமா?” என்ற நூலாக வெளியிட்டிருந்தவர். தன்முனைக் கவிதைத் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்நூல், “நானிலு” என்ற தெலுங்கு மொழிக் கவிதை வடிவமாகும். நான்கு வரிகள், வரிக்குஅதிக பட்சம் மூன்று சொற்கள், வரிகளில் முதல் இரண்டு வரிகள் ஒருநிகழ்ச்சியை அல்லது காட்சியை புலப்படுத்துவதாக அமைய ஏனைய இரண்டு வரிகளும் முந்திய வரிகளோடு தொடர்புபட்ட சாதகமான விடயத்தையோ அல்லது முரண்பட்ட விடயத்தையோ தருவதாக தன்முனைப்பாக்கள் அமையும். இந்நூல் 175 தன்முனைப் பாக்களோடு மலர்ந்திருக்கின்றது. இந்நூலுக்கானஅணிந்துரையை கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களும், மகிழ்ந்துரையை ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் அவர்களும், வாழ்த்துரையை ஏறாவூர் தாஹீர் அவர்களும் வழங்கியிருக்கின்றனர். மாதிரிக்கு ஒரு பாடல் “பாடசாலை அதிபர்கள்/ பணப்பை நிறைகிறது/ ஏழைப் பெற்றோரிடம் பெறும் அன்பளிப்புப் பணங்களால்.”

ஏனைய பதிவுகள்