கிக்கோ (இயற்பெயர்: இ.ருஷாந்தன்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
111 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-8715-35-2.
இந்நூலில் சமூகப் பிரச்சினைகளைக் கூறும் பொதி, கற்கக் கசடற, குழப்பம் ஆகிய மூன்று நாடகங்களின் எழுத்துப் பிரதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1995-1999 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விலங்கு வைத்திய கற்கைநெறியை மேற்கொண்ட காலத்தில் பல்கலைக்கழக பீடங்களுக்கிடையே நடைபெற்ற நாடகப் போட்டிகளுக்கென அவர் எழுதிய நாடகங்கள் இவை. முதலாவதாக இடம்பெறும் “குழப்பம்” நாடகத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தினைக் குழப்பத்துடனும், நாடகம் பார்க்கும் மனப்பாங்குடனும் பார்க்கும் தமிழ் மக்களை நமக்குக் காட்டுகிறார். இரண்டாவது நாடகமான “பொதி” மனித உறவுகளை மறந்து பொருளாசையில் சிக்கிக் கொண்ட தமிழரது மனித மனங்களைக் காட்டுகின்றது. மூன்றாவது நாடகமான “கற்க கசடற” வில் சின்னவளாக இருந்து பெரியவளாக வளரும் போது டாக்டராக, ரீச்சராக, பைலட்டாக வரவேண்டும் என்றெல்லாம் கனவு கண்ட ஒரு இளம் பிஞ்சை அவளின் தந்தை சிறுவர் உழைப்பாளியாக மாற்றிவிடுவதை காட்டுகின்றார். கல்வி உயரிய இலட்சியங்களைப் போதிக்கும் போதிலும் கள யதார்த்தம் சில சமூகங்களில் வேறாக இருப்பதை இந்நாடகத்தின் வழியாக புலப்படுத்துகிறார்.