உரும்பிராய் வி.ஜெகநாதன் (புனைபெயர்: நக்கீரன்). யாழ்ப்பாணம்: வி.ஜெகநாதன், உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி).
136 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-99181-4-6.
பால் சமத்துவமின்மை, பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான கருத்தியலை உட்சரடாகக் கொண்டு இக்காவியம் தொடங்குகின்றது. மதங்கள் எம்மதம் ஆயினும் அவற்றின் சமுதாய நோக்குநிலை பற்றிய கேள்விகளை எழுப்பிச் செல்கின்றது. புனித வேதாகமம் தொடக்கம் இந்து மத பக்தி இலக்கியங்கள் வரை அன்பு கருணை சமூகநீதியை அது தேடுகிறது. ஆன்மீகம் சமூக நோக்குடன் இசைவுபட வேண்டும் என்று கூறுகின்றது. வரலாறு முழுவதும் அடிமைத்தனமும் பஞ்சமும் போருமாக உருண்டு வந்த சரித்திரத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது. சிறு சிறு தலையங்கங்களுடன் கனதியான புதிய சொற்களுடன் இக்காவியம் எழுதப்பட்டுள்ளது. உரும்பிராய் வி.ஜெகநாதன் தனது பதின்ம வயதுகளிலேயே விவிலியத்தில் இயேசுநாதரின் மானுட முகத்தை தேடியவர். இடையறாது சமூக அனுபவத்துடன் வேதாகமத்தை பயின்றவர். அரங்க ஆற்றுகை, கவிதை, எழுத்து எனச் செயற்பட்டவர். பாதுகாவலன் பத்திரிகையில் பணியாற்றியவர். ஜெயசீலன் அடிகளாரால் முன்னெடுக்கப்பட்ட ”மனிதன்” மாத இதழில் அக்கால சமூக அக்கறை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து சமூக பொருளாதார அரசியல் தேடலில் ஈடுபட்டவர். அந்த அனுபவங்களின் பிழிசாரமாகவே இக்காவியம் எழுதப்பட்டுள்ளது.