மகாகவி காளிதாசர் (மூலம்), சுவஸ்திகா ரவிச்சந்திரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குரு வெளியீடு, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxx, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95610-1-4.
சம்ஸ்கிருத இலக்கிய மரபில் சிறந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கிய காளிதாச மகாகவி வட மொழியில் அருளிச்செய்த காப்பியமான “மேகதூதம்”, உலகம் போற்றும் உத்தமக் கவிவளம் வாய்ந்ததொரு நூலாகும். சிவபெருமானின் தோழனாகிய குபேரன் இட்ட சாபம் காரணமாகக் கடமையிற் பிழைத்த இயக்கன் ஒருவன் தன் காதல் மனைவியைப் பிரிந்து சித்திரகூட மலைச்சாரலில் எட்டுத் திங்கள் தனித்துவிடப்பட்டான். அங்கு அவன் துயருழந்த நிலையில் அவன் கண்ட வடக்கு நோக்கிச் செல்லும் கார் மேகத்தை தன் மனைவியின்பால் தூதனுப்பியமையே அப்பனுவல் கூறும் பொருளாகும். மனைவியைப் பிரிந்த இயக்கனது ஆராத காதல் மனநிலையை ஏற்றவகையில் இப்பாடலில் சித்திரித்துள்ளார். இக்காப்பியம் பூர்வமேகம், உத்தர மேகம் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. பூர்வமேகத்தில் 66 ஸ்லோகங்களும், உத்தர மேகத்தில் 55 ஸ்லோகங்களுமாக 121 ஸ்லோகங்களைக் கொண்டது.