மதுபாரதி (இயற்பெயர்: திருமதி பரமேஸ்வரி இளங்கோ). திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-944044-6-0.
இத்தொகுதியில் மொட்டவிழும் கணங்கள், என்னைச் சுற்றி ஓர் உலகம், ஒட்டப்படாத விளம்பரங்கள், காதலும் கனியும், பனித்திரை, நெஞ்சு பொறுக்குதில்லையே, வளர்-மதி, ஸ்ரீ ரஞ்சனி, சொல்லாத கதையொன்றின் சோகம் ஆகிய ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன. “காதலும் கனியும்”, “மொட்டவிழும் கணங்கள்”, “ஸ்ரீரஞ்சனி” ஆகிய கதைகள் பெண்களின் மனவுணர்வுகளைத் துல்லியமாகப் பதிவுசெய்கின்றன. பெண்களின் பிரச்சினைகள் சிலவற்றை வெவ்வேறு தளங்களில் நின்று நுணுக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் அணுகுகின்றன. ‘ஒட்டப்படாத விளம்பரங்கள்” என்ற கதை தாம் பெற்ற பிள்ளைகளில் மூத்த பிள்ளையை தமது ஏனைய பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக நேர்ந்துவிடும் பெற்றோரின் சுயநலம், அப்பிள்ளையின் கல்வியை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும், அதனால் படிப்பையே பாதியில் நிறுத்தும் அவலம் ஏற்படுவதையும் அழகாகச் சித்திரிக்கின்றது. பெண் கல்வியின் முக்கியத்துவம் இங்கு ஆழமாகப் பதிவுசெய்யப்படுகின்றது. திருமணங்களில் பொருத்தமற்ற இணைவு ஏற்படுத்தும் விபரீதம் பற்றிய கதையாக “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற கதை அமைந்துள்ளது. தலைப்புக் கதையான “என்னைச் சுற்றி ஓர் உலகம்”, குடிப் பழக்கத்தினால் குடும்ப உறவுகளிடமிருந்து பிரிந்து தனித்துவிடப்பட்ட ஒருவனின் கதையாகும். “சொல்லாத கதையொன்றின் சோகம்“, பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்கின்ற நுண்கடன் பிரச்சினையை மையமாகக் கொண்டது. பாமா சண்முகம் என்ற பெயரில் 1970களில் வானொலி எழுத்தாளராகத் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கியவர் மதுபாரதி. இவரது 15 கதைகள் அடங்கிய முதலாவது சிறுகதைத் தொகுப்பு “சுவடுகள்” என்ற தலைப்பில் 2016இல் வெளிவந்தது. மட்டக்களப்பில் ஏறாவூர் எல்லை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பின்னாளில் வத்தளையைத் தன் வசிப்பிடமாக்கிக் கொண்டவர். ஆசிரியராகவும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உதவி அணையாளராகவும் கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர்.