அலெக்ஸ் பரந்தாமன் (இயற்பெயர்: இராசு தங்கவேல்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 2வது பதிப்பு, மார்ச் 2022, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-624-5849-17-8.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து தன் எழுத்துப்பணியை ஆரம்பித்த இவர் 90களின் ஆரம்பத்தில் ஈழநாதம் பத்திரிகையில் ஒப்புநோக்குப் பணியாளராகப் பணியாற்றியதன் மூலம் ஊடகத்துறையில் கால் பதித்தவர். பின்னர் தினமுரசு, உதயன், காலைக்கதிர், எதிரொலி போன்ற ஊடகங்களில் ஒப்புநோக்குநராக, உதவி ஆசிரியராக, பத்தி எழுத்தாளராக, பிரதேசச் செய்தியாளராக எனப் பல்துறைகளிலும் இயங்கி வந்தவர். 90களின் நடுப்பகுதியில் தீவிரமாக எழுதிவந்த இவர் போரியல் சார்ந்த இலக்கியங்கள், அரசியல் சமூகம் சார்ந்த பத்தி எழுத்துக்கள் நேர்காணல்கள் என்று தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். “மரண வலிகள்” என்ற கவிதைத் தொகுப்பினை 2014இல் வழங்கிய இவர் தொடர்ந்து அழுகைகள் நிரந்தரமில்லை (2014), தோற்றுப்போனவளின் வாக்குமூலம் (2016) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். ”ஒரு பிடி அரிசி” இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். முன்னர் தமிழகத்தில் 2021இல் முதற் பதிப்பைக் கண்ட இந்நூல் தற்போது ஈழத்து வாசகர்களுக்காக தாயகத்தில் இரண்டாம் பதிப்பினைக் கண்டுள்ளது. இத்தொகுப்பில் ஒரு பிடி அரிசி, தண்ணீர், பசி ஒரு கொடுமை, இது போராடும் காலம், துஞ்சிடோம் இனி அஞ்சிடோம், பேராசை, நிவாரண அரசியல், அவள் வாழ வேண்டியவள், மால், மடத்துச் சோறு, நிறக் கவர்ச்சி, மாறிப்போன மனிதர்கள் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது மகுடம் பதிப்பகத்தின் 52ஆவது நூலாக வெளிவந்துள்ளது.