வண.ரீ.எஸ்.யோசுவா. கிளிநொச்சி: பச்சையிலை நம்பிக்கை வெளியீடு (Green Hope Pvt. Ltd), 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
viii, 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7825-04-5.
தாட்சாயணியின் அணிந்துரையுடன் கூடிய இச்சிறுகதைத் தொகுப்பில், “மீண்டும் அங்கேயே வந்து நிற்கிறேன்” என்ற ஆசிரியரின் கவியுரையைத் தொடர்ந்து பச்சரிசி, தேனிலை, பாலிலை, குறிஞ்சாளினி, வேலி, உயிரிலை, தங்கத் தவசி, நாவலின் காதலன், ஆடாதோடையும் ஆட்டுக் கல்லும், தேங்காய்ப்பூ ஊர்ப் பறவை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இவை இயற்கையோடு பின்னிப் பிணைந்த செடி கொடிகளும் மனிதனின் ஆரோக்கியத்தோடு எப்போதும் தொடர்புபட்டவையே என்ற கருத்தை வாசகனுக்குள் பதியம் வைக்கின்றன. கிராமப்புற மக்களின் மத்தியில் இன்னமும் தொலைந்து போகாத சில உணவுப்பழக்க வழக்கங்களை அழிவுறாமல் பேணி எதிர்கால சந்ததிக்குக் கடத்திவிடவேண்டும் என்ற வேணவா கதைகளினூடு வெளிப்படுகின்றது. ஒவ்வொரு கதைக்கு முன்னும் கதவைத் தட்டுகிற கதைசொல்லியின் மூலம் எளிமையான கிராமியத் தமிழில் ஒரு குடுகுடுப்பைக்காரனின் கிலுகிலுப்பைக் குரலையும் கவிவரிகளில் பதிவுசெய்து அக்கதைக்கான முன்னறிவிப்பொன்றையும் பதிந்து வைக்கிறார். நூலின் இறுதியில் “கதை கேட்டவர்கள் பகிர்ந்தவை” என்ற பிரிவில் மேற்படி கதைகளுக்கான வாசகர்களின் பின்னூட்டங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.