16685 நேர்த்திக் கடன்.

எஸ்.ஜோன்ராஜன். அக்கரைப்பற்று: தேவ் ஆனந்த் வெளியீட்டகம், விகாரை வீதி, அக்கரைப்பற்று, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

vii, 319 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-956-42565-2-1.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஜோன்ராஜன், தன் கதைகளில் முடிந்தவரை தன் பிரதேசப் பாரம்பரியங்களை, வாழ்வியலை முன்நிறுத்திவந்துள்ளார்.  இத்தொகுப்பில் அது ஒரு தனியுலகம், நம்பிக்கை, அப்படி என்ன செய்துவிட்டேன்?, இதுவும் ஓர் அடக்குமுறை, ஓர் அஸ்தமனத்தின் உதயம், ஒரு வெற்றிமிக்க தோல்வி, வாழ்நாளெல்லாம் அந்த இறைமகனைத் தேடி, தாபரிப்புப் பணம், நேர்த்திக் கடன், நீ மட்டும் சம்மதித்தால், ஒருவேளைச் சோறு, சாபம், மடியும் மயக்கமும், ஊனம் ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய 14 கதைகள் இடம்பெற்றுள்ளன. அது ஒரு தனியுலகம், ஒரு வெற்றி மிக்க தோல்வி என்பன மாணவர் உலகம் சார்ந்த கதைகள். அப்படி என்ன செய்துவிட்டேன், துறவறத்தினை விமர்சிக்கின்ற ஒரு கதை. அக்கதையின் கதாமாந்தர்கள் இன்றும் எம்மிடையே உலா வருபவர்களே. இதுவும் ஒரு அடக்குமுறை, போதையின் அச்சுறுத்தலால் நாசமாகிப் போய்க்கொண்டிருக்கும் எமது இளம் சமூகத்தினருக்கு பொருத்தமான கதை. சாதாரண சமூகப் பழக்க வழக்கங்கள் நம்மை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதை மிக அற்புதமாக இந்தக் கதைக்குள் பொதிந்து வைத்திருக்கிறார். ஓர் அஸ்தமனத்தில் உதயம், எம்மூர் அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டும் ஓர் கதை. நேர்த்திக் கடன், வாழ்நாளெல்லாம் அந்த இறைமகனைத் தேடி ஆகிய கதைகள் நேரடியாக சமய விமர்சனங்களைத் தாங்கிய முக்கிய கதைகளாகும். தாபரிப்புப் பணம், நமது குடும்ப அவலங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. நீ மட்டும் சம்மதித்தால் என்ற கதையும், 1969இல் எழுதப்பட்ட “ஊனம்” என்ற கதையும் சுவாரஸ்யமான அங்கதைச் சுவை மிகுந்த கதைகள். இக்கதைகள் தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய ஊடகங்களில் பிரசுரமானவை.

ஏனைய பதிவுகள்