அலெக்ஸ் பரந்தாமன். திருக்கோணமலை: இலக்சுமி பிரசுரம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, மாசி 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
72 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98245-2-2.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பரந்தாமன் என்று அறியப்பெறும் இராசு தங்கவேல். யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலியில் 13.10.1959 அன்று பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையிலும், பின்னர் எஸ்.எஸ்.சி. (முன்னைய கல்விப் பொதுத் தராதரப் பத்திர வகுப்பு) வரையான இடைநிலைக் கல்வியை அச்சுவேலி மகாவித்தியாலயத்திலும் கற்றவர். தன் பாடசாலைக் கல்வியை அச்சுவேலியில் முடித்துவிட்டு தொழில்வாய்ப்பினைப் பெற்று கொழும்புக்குச் சென்றிருந்த இவர், 1983இன் தமிழருக்கு எதிரான இன வன்முறையின் பாதிப்பினால் வன்னிக்குப் புலம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார். இவரது ஐந்தாவது நூலாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இக்கதைகள் லண்டனிலிருந்து வெளியாகும் சிறுகதை மஞ்சரி மாத இதழில் அவ்வப்போது வெளிவந்தவை. அம்மான்ரை காணி, கறிவேப்பிலைகள், காலந்தின்ற வாழ்வு, சிங்களத்தி, பாரந்தாங்கிகள், குழம்புச் சோறு, காலசூட்சுமம், பறையொலி ஆகிய எட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை எட்டுவிதமான பிரச்சினைகளை வாசகர்முன் வைக்கின்றன.