கே.எஸ்.சுதாகர். சென்னை 600040: எழுத்து பிரசுரம், Zero Degree Publishing, இல.55 (7), R- Block, 6th Avenue , அண்ணா நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (சென்னை: கிளிக்டோ பிரின்ட்).
156 பக்கம், விலை: இந்திய ரூபா 190.00, அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-93882-65-3.
பால்வண்ணம், தூங்கும் பனிநீர், வெந்து தணிந்தது காடு, அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை, கலைந்தது கனவு, ஏன், தலைமுறை தாண்டிய தரிசனங்கள், யாரோ ஒளிந்திருக்கின்றார்கள், பாம்பும் ஏணியும், அனுபவம் புதுமை, கனவு காணும் உலகம், நாமே நமக்கு ஆகிய பன்னிரு கதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. கே.எஸ்.சுதாகரின் கதைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க அம்சம், வடிவ நேர்த்தியாகும். கதைகளைக் கட்டமைப்பதில் அவர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக பால்வண்ணம், கலைந்த கனவு, பாம்பும் ஏணியும் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். இவற்றுள் பால்வண்ணம், கலைந்த கனவு ஆகியவை உளவியல் பாங்குடைய கதைகளாகும். தெளிந்த நீரோட்டம் போன்று அநாயாசமாக கதைகளை நகர்த்திச் செல்லும் போக்கும், சிறந்த மொழிநடையும் இக்கதைத் தொகுதியின் சிறப்பாகும். சுதாகர் யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறைப் பட்டதாரியான இவர், புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வருகிறார். 1983 முதல் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களிலும் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை “இனி ஒரு விதி செய்வோம்” ஈழநாடு வாரமலரில் வெளியானது.