16704 முரண்: சிறுகதைத் தொகுப்பு.

கோமகன். தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: ஜோதி என்டர்பிரைசஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.

எழுத்தாளரும், ”நடு” இணைய சிற்றிதழ் ஆசிரியருமான கோமகனின் மூன்றாவது வெளியீடாக ”முரண்” சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இதில் அகதி, முரண், தகனம், டிலீப் டிடியே, ஏறு தழுவுதல், வெள்ளி, ஆக்காட்டி, வெடிப்பு, மாதுமை, பருப்பு, சுந்தரி ஆகிய 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. ”இத்தொகுப்புச் சிறுகதைகளில் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண் பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதைசொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களைப் பேசியிருக்கின்றேன். அவற்றில்; நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். எனக்கு  இலக்கிய ஜாம்பவான்களைப் போல் சொல் கட்டத்தெரியாது. எல்லோருக்கும் வாலிபப்பருவம் அதன் வசந்தத்தையும் ஊர் உறவு நண்பர்கள் என்று அள்ளிக்கொடுக்க, அதே வயதில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உபரி விளைவாக நான் அகதியாக அந்நிய தேசத்துக்குப் புலம் பெயர்ந்ததும் இந்தச் சொல் கட்டுக்குள் வராமைக்கு ஒரு காரணமாகின்றது.” (என்னுரை, கோமகன்).

ஏனைய பதிவுகள்