தாமரைச்செல்வி (இயற்பெயர்: ரதிதேவி கந்தசாமி). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட்).
(8), 9-335 பக்கம், விலை: இந்திய ரூபா 375., அளவு: 21.5×14 சமீ., .> ISBN: 978-93-86820-15-0.
கொழும்பு மீரா பதிப்பகத்தின் 60ஆவது வெளியீடாக ஆசிரியரின் 10 கதைகளுடன் 2005இல் வன்னியாச்சி என்ற தலைப்பில் 95 பக்கங்களில் ஒரு நூல் வெளிவந்திருந்தது. அதே தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூல் தாமரைச்செல்வியின் 37 கதைகளுடன் காலச்சுவடு பதிப்பாக 2017இல் வெளிவந்துள்ளது. ஈழத்தமிழர்களின் துன்பங்களையும் பிரச்சினைகளையும் காலத்தின் கண்ணாடியாகத் தன் படைப்புகளில் பிரதிபலிக்கச் செய்பவர் தாமரைச்செல்வி. வன்னியாச்சி சிறுகதைத் தொகுதியிலுள்ள அனைத்துக் கதைகளும் எமது மண்ணின் மக்கள் பற்றியும் போரினால் அவர்கள் படும் துயர் பற்றியும் பேசுகின்றன. ஒவ்வொரு கதையின் மூலமும் ஈழத்தமிழர்களின் போரியல் வரலாற்றை அறியமுடிகின்றது. எந்த ஆண்டு எங்கு சண்டை நடந்தது அதன் விளைவுகள் என்ன என்பவை இவரது கதைகளுக்கூடாகப் பதிவாக்கப்படுகின்றன. 2005இல் இடம்பெற்றிருந்த பார்வை, சுவர், விழிப்பு, காணிக்கை, அம்மா, வன்னியாச்சி, முகமற்றவர்கள், இன்னொரு பக்கம், சில நிமிட மௌனம், தூரத்து மேகங்கள் ஆகிய கதைகளுடன் மேலதிகமாக பாலம், இங்கேயும் சில இழப்புக்கள், அவன்-அவள்-ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், ஒரு யுத்தத்தின் ஆரம்பம், விடை இதுதான், சாம்பல் மேடு, வாழ்க்கை, பசி, ஊனம், ரூனா, ஒரு மழைக்கால இரவு, நாளைய செய்தி, நியாயங்களும் மாறும், பகிர்வு, இடைவெளி, முற்றுகை, அழுவதற்கு நேரமில்லை, உறவு, பாதை, சுயம், பாதணி, ஊர்வலம், அக்கா, ஓட்டம், சிறை நிழல், அடையாளம் ஆகிய மேலதிக கதைகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. தாமரைச்செல்வி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் 1953இல் பிறந்தவர். 1973இலிருந்து இலக்கியத்துறையில் பயணித்து வருகின்றார். 200இற்கும் மேற்பட்ட சிறுகதைகளின் ஆசிரியர் இவர். இதைத் தவிர மூன்று குறுநாவல்களையும், ஆறு நாவல்களயும் இதுவரை எழுதியுள்ளார். வடகிழக்கு மாகாணசபை விருது (ஒரு மழைக்கால இரவு), யாழ். இலக்கியப் பேரவையின் பரிசு (விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், பச்சை வயல் கனவு), இலங்கை அரசின் சாஹித்திய விருது (பச்சை வயல் கனவு), தமிழ்நாடு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது (2010), சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது (தாகம்), கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது (2003), வட கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது (2001) உட்படப் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 4639).