தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம்). சாவகச்சேரி: திருமதி பிரேமினி பொன்னம்பலம், பெரிய அரசடி வீதி, சங்கத்தானை, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (மதுரை: கடல் பதிப்பகம்).
114 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 21.5×14 சமீ.
வெண்சுவர், இருத்தலின் வலி அல்லது இன்னுமொரு பக்கம், அம்மாவின் தோழன், இரண்டு கடிதங்கள், கத்தரிப்பூக் கிழங்கு, சாயம், சுடுவெயில், தனிமைப்படல், தாழமுக்கம், நட்சத்திரங்களாய் ஒளிரும் வகுப்பறை, புளிப்பின் சுவை, பெண்மையின் தவறோ ஆகிய பன்னிரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. இதற்குமுன், ஐந்து தொகுப்புகளை வெளியிட்டிருந்தாலும், தாட்சாயணி இந்தத் தொகுப்பின் மூலமே தமிழகத்தில் அறிமுகமாகிறார். இவரது அநேக கதைகளில் பிரதான பாத்திரங்கள் பெண்கள். தாட்சாயணியின் பெண்கள் அப்பாவிகள், சாத்வீகமானவர்கள். போராளிகளாக இருந்து வந்த பெண்களும் பின்னர் சாந்தமாக மாறுகிறார்கள். பல பெண்கள், மனதுக்குள் சோகத்தையும், இரகசியத்தையும் பதுக்கி வைத்திருக்கிறார்கள். சிலரால் இரகசியங்களைக் காலம்கடந்து சொல்ல முடிகிறது, சிலர் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்போகிறார்கள். சமகாலப் பிரச்சனையைச் சொல்லும் கொரோனாவின் புறப்பாதிப்புக் கதைகளும் சில தொகுப்பில் உள்ளன. பன்னிரண்டு கதைகளும் எந்தப் புதிய யுத்தியும், திடீர் திருப்பங்களும் இல்லாத, கதையம்சத்தை மட்டுமே நம்பிய, எளிமையான கதைகள். எளிமைக்கேயுரிய பிரத்யேகமான வசீகரம் தாட்சாயணியின் கதைகளிலும் தவறாமல் இருக்கின்றது.