நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 13: கே.எஸ்.கே.பிரின்டர்ஸ், 179, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை).
(12), 131 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-95090-1-6.
இந்நாவல் மலையகத்தின் கோப்பிக் காலத்தையும் கோப்பிப் பயிர்ச்செய்கை எதிர்பாராத விதத்தில் பரவிய ஒரு தொற்றுநோயால் அழிந்து போகவும் புதுப் பயிராக அறிமுகமான தேயிலை, மலையகப் பயிராக- பெருந்தோட்ட பொருளாதாரத்தின் மையமாகக் கிளம்பிய வரலாற்றைப் பேச முனைகிறது. இக்கதைக்கான காலத்தில் இவ்விளம் படைப்பாளியோ அவரது பெற்றோரோ வாழ்ந்திருக்கவில்லை. அதனால் செவிவழிக் கதைகளையும், கோப்பிக் கால மலையக வரலாற்று நூல்களையும் தனது அதீத கற்பனை வளத்தையும் முதலீடாகக் கொண்டு இந்நாவலை வளர்த்துச் சென்றிருக்கிறார். அன்னக்கிளி என்னும் ஐந்தே வயதான சிறுமியை ஒரு பாத்திரமாக்கி இக்கதை நகர்கின்றது. அன்னக்கிளி ஐந்து வயதாயிருந்தபோது தான் மலையகம் கோப்பிப் பயிர்ச் செய்கையிலிருந்து தேயிலைப் பயிர்ச் செய்கைக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது. இந்த நிலைமாறு காலத்திலேயே கதை நடைபெறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65954).