எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: எம்.பாலகிருஷ்ணன், Books Prishanmi, 33B, N.H.S., Sri Dhamma Mawathe, 1வது பதிப்பு, நவம்பர் 1999. (கொழும்பு: ஏ.எஸ். டெஸ்க் டொப் பப்ளிஷிங் சென்டர்).
58 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 21.5×16 சமீ.
இலங்கையில் நடந்த ஓர் உண்மைக் கதையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல் அதனை பின்னணியாகக் கொண்டு விறுவிறுப்பான நாவலக்குரிய சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றை எழுதுபவர்களுக்கு தவிர்க்க முடியாத பாத்திரமான ரொபர்ட் நொக்ஸ் இன் கதையே இதுவாகும். இலங்கையைப் பற்றி வெளியான முதலாவது ஆங்கில நூலை எழுதியவர் ரொபர்ட் நொக்ஸ். 1641 பெப்ரவரி 8 அன்று பிறந்த நொக்ஸ் பெரிய தனவந்தரான தனது தகப்பனோடு 14 வயதிலேயே கடற்பிரயாணம் செய்து இந்தியாவில் தங்கியிருந்து வியாபாரங்களை முடித்துக்கொண்டு ஈரான் நோக்கி சென்று கொண்டிருக்கையில் புயலுக்கு அகப்பட்டு கப்பல் சேதமானது. அந்த கப்பலுக்குத் தேவையான மரங்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் கிடைப்பதாக அறிந்து மூதூரிலுள்ள கொட்டியாரக்குடாவுக்கு 19.11.1659இல் வந்து சேர்ந்தார். திருத்தப் பணிகளுக்காக அங்கு தங்கியிருந்த வேளை சிப்பாய்களை அனுப்பி அவர்களை கைது செய்தனர். 16 பேரையும் கைது செய்து விலங்கிட்டு காடுகள் வழியே கண்டிக்கு நடையாக அழைத்துச் சென்றனர். கப்பலில் இருந்த ஏனைய மாலுமிகளை தனித்தனியாக வெவ்வேறு கிராமங்களில் விட்டனர். ரொபர்ட் நொக்ஸ் மற்றும் அவரது தந்தையை ஒன்றாக வாரியபொலவிலுள்ள பண்டார கொஸ்வத்த என்கிற இடத்திலும் தங்க வைத்தார்கள். அவர்களுக்கு மாற்று உடையோ, உறங்க பாய் எதுவும் கொடுக்கப்படவில்லை.அவர்கள் சிறைகளில் வைக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் மலேரியா நோய்க்கு இலக்காகி நொக்சின் தந்தை கப்டன் நொக்ஸ் 1661 பெப்ரவரியில் கண்டியில் இறந்து போனதும் தனிமை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். இலங்கை தப்புவதற்காக தன்னை தயார் படுத்தி 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கையிலிருந்து அவர் தப்பியது ஒரு அழகான சாகசக் கதை தான். இந்நாவல் அவரது கதையை புயலில் சிக்கும் கப்பல், கப்பலுக்கு வந்த திடீர் கடிதச் செய்தி, சென்ற மகனை எதிர்பார்த்துத் தந்தை கரையில் காத்திருக்கிறார், தந்தையின் புதைகுழியை மகனே தோண்டும் நிலை, வீடு கட்டுதல், கண்டியில் விடுதலை ஆயினும் மீண்டும் கைதியாகுதல், கண்டி வீதிகளில் பிச்சையெடுக்கும் நிலை, நண்பன் லவ்லேண்டின் மரணம், வடக்கு நோக்கிச் சென்று வியாபாரஞ் செய்தல், வடக்கு நோக்கிய இறுதிப் பயணம், முதற்கட்டமாக அனுராதபுரம் அடைதல், காட்டு வழியே டச்சு எல்லையை அடைதல், அரிப்புக் கோட்டையை வந்தடைதல், மன்னாரில் ஐரோப்பிய முறையில் விருந்து ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20790).