ஸ்ரீலேக்கா பேரின்பகுமார். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜீன் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 136 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-48-2.
ஸ்ரீலேக்கா தன் கண்கள் படம்பிடித்த மன்னார் பிரதேசத்தின் இயற்கைப் பேரழகை இந்நாவலின் ஊடாக வாசகர்களின் மனங்களில் வர்ணக் கலவைகொண்டு தீட்டிச் செல்கிறார். பல மன்னார்க் கிராமங்களில் பெருந்தொகையிலான மாடுகளை வைத்திருப்போர் வெள்ளாமைக் காலம் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்திற்கும், மாடுகளின் மேய்ச்சலுக்காகவும், ஊர்விட்டு ஊர் சென்று பல மாதங்கள் தங்கியிருந்து மீண்டும் வீடு திரும்பும் வாழ்வியல் பற்றிய பின்னணியில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை முறையினை அவதானித்து அந்த மேய்ச்சல் தரை வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களை இக்கதையில் புகுத்தியிருக்கின்றார். தனக்கு உதவிய குணாசீயஸ், யூலியன் ஆகியோரும் இந்நாவலின் பாத்திரங்களாகின்றனர். காலத்துக்குக் காலம் குறைவடைந்து வரும் மேய்ச்சல் தரைகளினால் ஐந்தறிவு ஜீவன்களான மாடுகள் மாத்திரமல்லாது ஜீவனோபாயத்திற்காக அவற்றை நம்பி வாழும் ஆறறிவு மனிதரின் வாழ்க்கைப் போராட்டம் புதிய பல நிகழ்களங்களை இந்நாவலாசிரியருக்குத் திறந்து விட்டுள்ளது. ”ஓர் ஆக்க இலக்கியப் படைப்பாளிக்கு ஏனைய கலைகள் மீதுள்ள ஈடுபாடும் தாடணமும் அவரது இலக்கியப் படைப்புக்களை நேர்த்தியாக செழுமைப்படுத்தும் என்பதை உணர்த்தி நிற்கின்றன ஸ்ரீலேக்காவின் படைப்புகள். இவரிடத்தில் மிகக் கூர்மையான ஒரு பார்வை இருக்கின்றது. சமூகத்தை ஆழ்ந்து நோக்கும் இயல்பு இருக்கின்றது. தான் அனுபவித்தவைகளை நேரிற் கண்டவைகளை சொல்லக் கேட்டவைகளை மிகச் சிறப்பாக நுட்பமாக சித்திரிக்கும் நேர்த்தி இருக்கிறது. மொழியை இலாவகமாகவும் சரளமாகவும் கையாளும் திறமை கைவரப் பெற்றவராக காணப்படுகிறார். நாட்டார் வழக்காறுகள் இவரது படைப்புகளில் தூக்கலாக மேலோங்கி நிற்பதுடன், அந்த வாழ்வுடன் கலந்து இன்றும் மாறாத நடைமுறை வாழ்வியலையும் கண்டு தெளிந்து சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீலேக்கா நாவலாசிரியராகப் பரிணமிக்கத் தகுந்த இலக்கிய அம்சங்கள் இவர் எழுத்துகளில் தென்படுகின்றன. இவர் நாவல் இலக்கியம் படைக்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு” என்று அமரர் தெணியான் இவர் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இங்கு மீள்பதிவிடல் பொருத்தமாகும். இந்நூல் 225ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.