செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2011. (சென்னை: சிவம்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.
கிராமப் புறங்களில் தொழில்நுட்பமாக டிராக்டர், இரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்பன நுழைந்துவிட்டன. கிராமப்புற பாட்டாளிகளின் வேலையிழப்பு, குறைந்த நாள் வேலை எனக் கூக்குரல்கள் எழுந்துள்ளன. உழைப்பை விற்க பாட்டாளிகள் நகரங்களை நோக்கினர். மேல்நாடுகளிலும் இயந்திர உற்பத்திகளின் புரட்சி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இக்கட்டான நிலையைத் தோற்றுவித்துள்ளன. இயந்திர உற்பத்தி தொழில்நுட்பத்துடன் மேம்பட தொழிலாளர் தேவையும் சுருங்கி வருகிறது. அதனால் அவர்களின் அரசியல் போராட்டமும் சுருங்கி வேலையிழப்பு, பாதிநேர வேலை, வேலையின்மை என மோசமடைந்து வருகிறது. பொருளாதார வீழ்ச்சி, தேக்கம் என நிபுணர்களும் அரசியலாளர்களும் கூறி வருகின்றனர். இதிலிருந்து மீட்சி உண்டா என்பதை இந்நாவலின் பாத்திரங்கள் உரையாடித் தீர்க்கின்றனர். மனித உரிமைக் கழகம் சார்ந்த திருமலை என்பவன் இதற்கு புதிய விளக்கம் கூறுகிறான். போராட்டங்கள் புதிய விளக்கம் எடுக்கின்றன என்பான். திருமலையின் தங்கை சரஸ்வதி ஆதிமக்கள் கண்டுபிடித்த வீணைப் பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறாள். இசை மூலம் ஐம்புலன் இன்பம் பெற முடியும் என்பாள். அவள் நேசிக்கும் பார்த்திபன் உற்பத்திச் சக்திகள் உச்சகட்டத்தை அடைந்த வேளை மூன்று மணிநேர உழைப்பே வாழ்க்கைக்குப் போதும், மேலதிகமான உழைப்பு மூலதனத்தால் அபகரிக்கப்படுகின்றது என்பான். மேலும் பெண்ணியத்துக்குப் பதிய விளக்கமும் நடைமுறையாக இடையிடையே கூறுவான். பாப்லோ நெருடா (1904-1973) சிலி நாட்டில் பிறந்து ஸ்பானிஷ் மொழியில் கவிதைகளைப் படைத்தவர். 1971இல் நோபல் பரிசுபெற்ற இக்கவிஞரின் இறுதிக் கவிதைத் தொகுதி The Book of Questions என்பதாகும். அதில் வரும் குறள் போன்ற இருவரிக் கவிதைகளில் ஒன்று ”காற்று அசையாது நிலையாக நிற்கையில்/ சூறாவளிக்கு என்ன பெயர்?” என்பதாகும். இக்கவிதையின் இரண்டாவது அடியே இந்நூலின் தலைப்பாகியுள்ளது.