பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1,1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (மின்நூல் வடிவம்).
(4), 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இக்கதை 1860இல் ஆரம்பித்து ஐந்து தலைமுறைகள் வரை தொடர்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கொத்தடிமைகளாக தமிழ்நாட்டில் இருந்து குறைந்த சம்பளத்தில் மலையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட “தமிழ்க்கூலிகள்” எனப் பெயர் சூட்டப்பெற்ற அப்பாவித் தமிழர்களின் ஐந்து தலைமுறை சமூக பொருளாதார வளர்ச்சி 15 அத்தியாயங்களில் இங்கு நாவலாக்கப்பட்டுள்ளது. மண்பாடு வீரசாமி, கண்ணுசாமி (கண்ணன்), இலங்கைப் பயணம், யாழ்ப்பாணத்தில் கண்ணுசாமி, புளும்பீல்ட் தேயிலைத் தோட்டம், செல்லச்சாமி-வள்ளியம்மா, அத்தியடி ராஜேந்திரன், சந்திரன்-தேவி, வேலைக்காரன் வேலுச்சாமி, ஏமானுவேல் பாதிரியார், பட்டதாரி வேலுச்சாமி, தாரகா, “சூரிய உதயம்” திட்டம், இராமசாமி, வேர்களைத் தேடி ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நாவல் விரிகின்றது. பொன்.குலேந்திரன் யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதிகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்வேறு அரபு, ஐரோப்பிய நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி இறுதியாக கனடாவில் டெலஸ் தொலைத்தொடர்பு தாபனத்தில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர். கனடாவில் குவியம் என்ற இணையத்தளத்தை நடத்துபவர். இதே பெயரில் அறிவியல் சஞ்சிகையொன்றும் இவரால் நடத்தப்பட்டது.