செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2016 (சென்னை: சிவம்ஸ்).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.
ஓய்வுபெறும் தந்தையாரின் மளிகைக் கடையை மகள் அம்பிகா தன் உடன்பிறவா கல்லூரி விடுதித் தோழி மாலதியுடன் சீராக்கி நடத்துகிறாள். மேற்குலகில் தோழியர் இருவர் சட்ட விதிகளுடன் வாழும் உரிமை 37 நாடுகளில் நிலைபெற்று விட்டது. இங்கு இன்றுள்ள குடும்ப அமைப்பு வேலைப் பிரிவுடன் நீளும் வரை பெண் அடிமை நிலை தொடரும் என்று எதிர்வுகூறுகிறாள் தோழி. அதிலிருந்த விடுபட்டு, தோழியர் இருவர் தனித்து வாழும் உரிமை உலக நாடெங்கும் இந்த நூற்றாண்டில் பரவுவது வரவேற்புக்குரியதென்கிறாள். தற்போது கல்வி, சேவைகள், கூலி, உழைப்பு என்பவற்றில் சமநிலை உருவாகி வருகின்றன. மகளிர் மட்டும், மகளிர் விடுதிகள், இங்கு வேகம் பெறுகின்றதைக் காணமுடிகின்றது. அத்தோடு பெண்ணடிமைத்தனம் ஓரளவு ஒழிந்து வருவதைக் கவனிக்கலாம் எனக் கூறுவாள் அம்பிகா. மேலும் நடைமுறைச் சான்றுகள் இருட்டறையில் உள்ளன. நாம் அதுபற்றி வெளியே பேசுவதில்லை என்பாள் அம்பிகா. மகப்பேறு சார்ந்து ஏற்பட்ட வேலைப் பிரிவினையே பெண்ணினத்தை அடிமையாக்கியது என்பார் எங்கெல்ஸ். அடிமை உழைப்போடு தொடர்ந்த கர்ப்பம், குமட்டல், துன்பம், உப்பிய வயிறு சுமந்து, இரத்தம் சிந்தும் உயிரச்சம் கொண்ட மகப்பேறு, பாலூட்டி வளர்த்தல் போன்ற மேலதிக துன்பங்கள். இன்று பெண்கள் வயிற்றையே வெட்ட அனுமதிக்கும் சிசேரியன் வேறு. மேலும் ஆண் வாரிசுக்காகவும் தொடர்ந்து சினைப்படுத்தல் துன்பம். குடித்தொகையை பெண்ணினமே தீர்மானிக்க வேண்டும். மனித இனம் தொடர்ந்து உயிர் வாழ உணவு, வீடு, பாலின்பம் என இயற்கை வழங்கியது. பெண் அடிமை நிலைமை வேலைப்பிரிவுடன் ஆணினமே திணித்தது. இன்றுவரை ஆணாதிக்க சமூகம் மேலதிக உழைப்பான மகப்பேறுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64897).