அ.இரவி. தமிழ்நாடு: சுதர்சன் புக்ஸ் அன்ட் க்ராப்ட்ஸ், 15/4, கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (சென்னை 600001: Adyar Students Xerox Pvt. Ltd., No.9, Sunkuraman Street, Parrys).
207 பக்கம், விலை: இந்திய ரூபா 295., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-83839-16-2.
சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் (Official Language Act) என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜீன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ”சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப் பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதை மறுத்த அரச ஊழியர்கள் தமது அரச ஊழியத்தை இழந்தார்கள். இதன் பின்னணியில் இக்கதை உருவாக்கம்பெறுகின்றது. இது தனி ஒருவரின் கதையல்ல. ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஒருவெட்டு முகமே இக்கதை. தமிழில் ஐந்தாம் வகுப்பு வரையே படித்த ஒரு தமிழர், சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாததால் தனது அரசாங்க உத்தியோகத்தை இழக்கிறார். அந்த இழப்பு அவருக்கான வலி மாத்திரமல்ல. ஒரு குடும்பத்திற்கான வலி, ஒரு இனத்திற்கான வலி, ஒரு தேசியத்திற்கான வலி. அந்த வலியினைக் கலாபூர்வமாகச் சொல்ல முயல்கிறது என்பதுதான் இப்படைப்பின் வெற்றி. இந்நாவல் வரலாறு சொல்லமுடியாத வெளிகளில் புகுந்து வாழ்வைச் சொல்கின்றது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1960இல் பிறந்த அ.இரவி, தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்து 1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று 1986இல் பட்டதாரியானவர். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் 1992இல் அரங்கியலில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார். 1995இல் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்று பத்தாண்டுக்காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுசு, சரிநிகர், புலம், ஒரு பேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர். லண்டனில் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். தனது 20ஆவது வயதில் எழுதத் தொடங்கிய அ.இரவி, பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பாராட்டையும் பெற்றவர்.