செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2016. (சென்னை சிவம்ஸ்).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.
இந்நூல் வானமண்டலத்தில் தானே நாள்தோறும் தன்னைத் தானே சுற்றும் பூமியும் அங்கு வாழும் மனித உயிரினங்களும் சிறுமையானவையாக எண்ணச் செய்கின்றது. மனோன்மணியும் நேசமலரும் நெருங்கிய தோழியர். மனோன்மணி தன் அக்கா போல, வெளிநாட்டு மாப்பிள்ளை தேடி, தன்னையும் பணயம் வைத்து முயல்கிறாள். அவளது முயற்சி தோல்வியில் முடிகின்றது. நேசமலர், தேசிய இனப் போராட்டத்தில் ஈடுபட தோழி மனோன்மணியையும் இணைக்கிறாள். ஆயுதப் பயிற்சி பெறவும் தமிழ்நாடு செல்கின்றனர். அங்கு பயிற்சியுடன் கல்வியும் பெற வாய்ப்பு ஏற்படுகின்றது. ஓய்வுபெற்ற பேராசிரியர் பொன்னம்பலம் மூலம் முன்னர் கற்ற மானிடவியல் கல்வியில் ஆர்வம் காட்டுகின்றனர். நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டம் தோல்வியடைய, பேராசிரியரின் உதவியுடன் தமிழ் நாட்டிலேயே தமது கல்வியைத் தொடர இருவரும் தீர்மானிக்கின்றனர். உயிரியல் அறிஞர் ஏர்னஸ்ட் மேயர் (Ernest Mayr) கூற்றுப்படி நோம் சொம்ஸ்கியின் “மேலாதிக்கம் அல்லது உயிர்வாழ்வு” நூலில் மனித இனத்தின் சராசரி வாழ்வுக்காலம் ஒரு லட்சம் வருடங்களாகும். கிறிஸ்டபர் லோயிட் (Christoper Lloyd) முதல் மனித இனமாகக் கூறப்பட்ட ஹோமோ சேப்பியன் தோன்றிய ஆண்டுகள் 50,000 என்பார். அக்கூற்றின்படி மேலும் 50,000 ஆண்டுகளே மனித இனம் வாழ முடியும் என்பதே மனோன்மணியின் கணக்கு. நோம் சொம்ஸ்கி தன் நூலில் ’ஆபத்தான காலங்கள்” என அச்சுறுத்திக் கூறும் பகுதியில் வறட்சி, வெள்ளம், சுனாமி, நோய், பூகம்பம் உட்பட அணுகுண்டு மட்டுமல்ல, தொடர்பு சாதனமாக வானில் தொங்கும் சிறு சட்டிலைட் கோள்களாலும் பூமிவாழ் உயிரினங்களுக்கு எக்காலத்திலும் அழிவு ஏற்படலாம் என்பார். பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும், தனித் தனியாக ஊழிக்காலம் உள்ளது. மனித இனம் உட்பட – என்பாள் மனோன்மணி.