செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: சிவம்ஸ்).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் பிறப்பு இயற்கையுடன் தோன்றிய அழகு அனைவராலும் விரும்பப்படுகின்றது என்பதுடன், அதுவே பலராலும் வேண்டப்படுவது என்று ஆசிரியர் கதாபாத்திரங்களின் வழியாக நிறுவுகிறார். ஆடைகள் அலங்காரம் உட்பட எல்லாமே சிறப்பாக அமைவதையே பெண்கள் விரும்புவார்கள். அத்தகையோரே தமது வாழ்வில் அழகாய் காதலரை, கணவரைக் கவர்ந்து சிறப்புறுவர் என்ற நம்பிக்கை எம்மவரிடையே உள்ளது. அதே போல ஆண்களும் வெள்ளை, சிகப்பு நிற கவர்ச்சியான பெண்களை விரும்பலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. இயல்பாக, இயற்கையாக எதிர்பாலாரின் கவர்ச்சி, பாலுறவு எழுச்சியைத் தூண்டலாம் எனலாம். மீனாட்சியும் செல்லம்மாவும் மேல்நிலைப் பள்ளித் தோழியர். அன்று வீடு திரும்பும்போது கோயில் சிலைகள் பற்றிய விவாதம். “நீ கறுப்பியடி. எவரும் கலியாணம் கட்ட வரமாட்டார்கள்” அழகியான செல்லம்மா நேரடியாக மீனாட்சியை மனம்வருந்த வைத்துவிட்டாள். மீனாட்சி ஆற்றா நிலையில் மறுநாள் தன் ஆசிரியரிடம் மன ஆறுதல் பெற தன் கவலையைக் கூறினாள். “உன் கல்வித் தரத்தை உயர்த்து. மதிப்பு தானே வரும். அவளது உடலில் ஓடுவதும் உன் சிவப்பு இரத்தமே” என ஆறுதல் வழங்குகிறார். கல்லூரி பேராசிரியருடன் சேர்ந்து மேல்நிலைக் கல்வி, அழகியல் கோட்பாடு சார்ந்த ஆய்வில் மீனா ஈடுபடுகிறாள். பேராசிரியருடன் இணைந்து ஜேர்மன் சமூகவியல் சித்தாந்தவாதியான தியடோர் அடனோர் பற்றிய ஆய்வில் பேராசிரியருக்கு உதவுகிறாள். அன்னாரின் அழகியல், சமூகவியல் கோட்பாடுகளை ஆய்வதில் பேராசிரியருடன் ஈடுபட்டு, தன் புதிய அறிவு, ஆய்வு நிலையை மேம்படுத்திக் கொள்கிறார். மேலும், சினிமா உலகில் உதவி டைரக்டர் அம்பி, ஆனந்தன் ஆகியோரின் தொடர்பும் அவளுக்குப் பயன்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64921).