நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 13: சண் கிராப்பிக் அன்ட் பிரின்டர்ஸ், 340, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை).
xv, 135 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-624-95090-2-3.
மலையகத்தில் ஹப்புத்தளையை பிறப்பிடமாகக் கொண்டு, கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட நிவேதா எழுதிய மூன்றாவது நாவல். இதற்கு முன்னர் இவர் “பாலை நில ரோஜா”, “அன்னக்கிளிக்கு அஞ்சு வயசு” ஆகிய இரு நாவல்களை எழுதியிருக்கிறார். இந்தக்கதை பெருந்தோட்ட சமூகத்தில் “முல்லை” என்ற ஒரு பெண்ணைப் பற்றியது. தந்தையை இழந்து, விதவைத் தாய், பாட்டி, அத்தை ஆகியோருடைய அரவணைப்பில் முல்லை வாழ்ந்து வருகிறாள். இந்த மூன்று பெருந்தோட்டப் பெண்களினதும் இலட்சியக் கனவை நிறைவேற்றும் முல்லை கல்வியில் சிறந்து விளங்குகிறாள். உயர் கல்விக்காகத் தோட்டத்தை விட்டு நகரத்துக்குச் செல்லும் அவளை ஊர் மக்கள் ஒன்றுகூடி ஆசீர்வதித்து வழியனுப்பி வைக்கின்றனர். மலையகக் கல்வி வளர்ச்சியில் தோட்ட மக்கள் ஆர்வத்தைக் காட்ட முன்வந்திருப்பதை கதாசிரியர் இங்கு மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுகிறார். முல்லை பக்கத்தூரில் வங்கியொன்றில் உயர் அதிகாரியாகப் பதவியேற்று, கம்பீரமாகத் தன் தொழிலை ஆற்றத் தொடங்குவதாகக் கதை நகர்கின்றது. சமூக கலாசார பேதங்களில், பொருளாதாரத் தாழ்வில், ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டம் உயர்வதற்கான ஒரே துணை கல்வி தான் என்பதை இந்நாவல் தெளிவுபடுத்துகின்றது.