16776 மேகலை கதா (நாவல்).

தேவகாந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 186 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-3491-36-7.

ஆசிரியரின் ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியில் தேவகாந்தன் முனைந்துள்ளார். அதற்காக தன்னை நிறையத் தயார்படுத்தவேண்டி இருந்ததென்கிறார். மறுபடியும் “மணிமேகலை”க்குள் புகுந்து, இந்திரவிழாவும், கண்ணகி-கோவலன் வரலாறும் காண சிலப்பதிகாரத்தின் புனர் வாசிப்பும் இவருக்கு அவசியமாயிற்று. பௌத்த தத்தவங்களை மீளப் படிக்கவும் நேர்ந்துள்ளது. அத்தனை வாசிப்பு, ஆய்வு முயற்சிகளுக்குப் பிறகே மணிமேகலை கதா உருவாகியுள்ளது. இக்கதை அறவாழித் துறவியான மணிமேகலையிலிருந்தல்ல, மணிபல்லவத் தீவகத்து மணிமேகலா தெய்வத்திலிருந்தே கதையைத் துவக்கியிருக்கிறார். பெரும் அறக் காரியங்கள் செய்த மணிமேகலையைவிட, அவளை அந்த நெறியில் சாதுர்யமாகப் புகுத்திய அவளது குலதெய்வமான மணிமேகலா தெய்வம் கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆசிரியருக்குப் பட்டிருக்கிறது. சமயக் கருத்தாடல் “மேகலை கதா” நாவலின் சுவை நீட்சியோடு முட்டி மோதிக் கொள்ளாதவாறு புனைவு பின்னப்பட்டிருத்தலும், அதற்கு அனுசரணையான மொழியாடல் இடம்பெற்று இருத்தலும், குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். வளமான மொழிச் செறிவு கதையோட்டத்துடன் கலந்துள்ளது. பௌத்த தத்துவத்தோடு இணைந்த இலக்கியங்கள் தமிழில் பரவலுற்றிருந்தாலும், மணிமேகலை அவற்றுள் மேலோங்கிய படைப்பாக கால நீட்சியில் இருந்துவருகிறது. காவியப் புனைவை நாவல் புனைவாக மாற்றிய, மறுவாசிப்புடன் இணைந்த புத்தாக்கம் இதுவாகும். “மீளச் சொல்லல்” (Retold) என்பது பனுவல்களை அறிமுகப்படுத்தும் இலக்கியச் செயற்பாடாகும். மூலப் னுவலின் கருவை அடியொற்றிய நாவலாக்கம், ஆக்க மலர்ச்சியுடன் இணைந்த புதிய வடிவத்தைப் பெற்றுக்கொள்ளும். அத்தகைய எழுதுகையை ‘மேகலை கதா” வெளிப்படுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்