16777 மோகனாங்கி: தமிழின் முதல் வரலாற்று நாவல்.

திருகோணமலை த.சரவணமுத்துப் பிள்ளை (மூலம்), கனகசபாபதி சரவணபவன், சற்குணம் சத்யதேவன், முரளிதரன் மயூரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 3வது பதிப்பு, 2023, 1வது பதிப்பு 1895, 2வது பதிப்பு 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxii, 290 பக்கம், விலை: ரூபா 1950., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-6164-38-3.

சென்னை இந்து யூனியன் அச்சகத்தில் 1895இல் அச்சிட்டு வெளியான மோகனாங்கி என்ற  நூல், தஞ்சையிலும், திருச்சியிலும் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. இவ்விரு பகுதிகளின் ஆட்சியாளரிடையே நிகழ்ந்து வந்த அரசியல் போட்டிகளைப் பின்னணியாகக் கொண்டு இப் புதினத்தின் நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. சொக்கநாதன், மோகனாங்கி என்னும் இருவருக்கிடையேயான காதல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் இக்கதையில் இடையிடையே கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. தஞ்சைநாயக்க இளவரசி மோகனாங்கிக்கும் திருச்சிராப்பள்ளி மன்னரான சொக்கநாத நாயக்கருக்கும் இடையே தோன்றிய காதலும் அதனால் மூண்ட போரும் பின்னாளில் இருவரும் இணைவதுமான கதையம்சத்தை இந்நவீனம் கொண்டிருந்தது. 17ம் நூற்றாண்டுத் தமிழர்களின் நாயக்கராட்சியின் பகைப்புலத்தில் காதல், வீரம், சூழ்ச்சி என்பனவற்றை சுவையாக இணைத்து கதை விறுவிறுப்பாகக் கொண்டுசெல்லப்படுகின்றது. சரவணமுத்துப்பிள்ளை எல்லா முக்கிய கதாபாத்திரங்களையும் பற்றி விரிவாக ஆய்வு செய்ததுடன், வரலாற்று ரீதியாகத் துல்லியமான நிகழ்வுகளுடன் தனது கதாபாத்திரங்களைக் கவனமாகப் பயன்படுத்தி நாவலுக்குரிய அம்சங்களையும் இணைத்து அற்புதமான காந்தர்வ விவாக காதல் கதையை படைத்துள்ளதால் சிறந்த வாசிப்பு அனுபவத்தை மோகனாங்கி வழங்குகிறது. 1895 இல் வெளிவந்த நூல் என்றாலும், தற்கால நாவல்களைப் போன்றே விறுவிறுப்பும் சுவாரசியமும் குறையாத நாவல் இது. வெறும் வரலாற்றுக் கதைப்புத்தகமாக அல்லாமல், இந்நாவலில் பெண்ணியக் கருத்துக்கள் முதல் அரசியல் விமர்சனங்கள் வரை மிகக்கூர்மையாக முன்வைக்கப்படுகின்றன. மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால்  வரலாற்றைச்  சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே  அதன் தனிச் சிறப்பு என்பர் ஆய்வாளர்கள்.

ஏனைய பதிவுகள்