வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
viii, 162 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-4041-01-1.
ஈழத்தில் தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற பல்கலைக்கழகங்கள் பல இருப்பினும் அவற்றைக் களமாகக் கொண்ட நாவல்கள் அரிதாகவே வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக வரலாற்றுடன் ஒப்பிடும்போது, குறுகிய கால வரலாறு கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகம் முதன்முதலாக நாவலொன்றின் களமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சற்று முற்பட்ட காலம் வரை முனைப்புற்றிருந்த அரசியல், தாயக விடுதலைப் போராட்ட நிலவரங்கள் இடம்பெறுவதன் காரணமாக சமகால நாவலக்குரிய வாடை இந்நாவலில் வீசுவதைத் தவிர்க்க முடியாது. நாவலின் நிகழ்களம் 1992-1998 காலகட்டத்துக்குரியதாகும். இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும், சுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும் ஒரு மாணவ சமூகம் தமது கல்வியை மேற்கொண்டிருந்த களநிலவரங்களை இந்நாவல் பதிவுசெய்திருக்கிறது. போராட்டமே வாழ்வு என்றிருந்த அக்காலகட்டத்தில் எமது தமிழ் மாணவர்கள் கல்வியையும் போராடித்தான் பெறவேண்டியிருந்தது. மைக்கல் கொலின் 1997களில் தன் பல்கலைக்கழகக் காலங்களில் எழுத ஆரம்பித்து மூன்று அத்தியாயங்களுடன் முடிவுறாமல் இருந்து, பின்னர் முப்பது அத்தியாயங்களையும் தாண்டி விரிந்து, “தினக்கதிர்” வார இதழில் “காதல் வெண்ணிலா கையில் சேருமா?” என்ற தலைப்பில் தொடராக பிரசுரமாகியது. பின்னர் திருக்கோணமலையிலிருந்து கவிஞர் மாயனின் (ஸ்ரீஞானேஸ்வரன்) “மாலைமுரசு” வாரமலரிலும், கனடாவிலிருந்து வெளிவந்த “ஆதவன்” பத்திரிகையிலும் ”வீணையடி நீ எனக்கு” என்ற தலைப்புடன் 2015இல் தொடர்கதையாக வெளிவந்திருந்தது. தற்போது இந்நூல் 41ஆவது மகுடம் பிரசுரமாக வெளிவந்துள்ளது.