இராசலட்சுமி கயிலாசநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இராசலட்சுமி கயிலாயநாதன், அங்கையன் பதிப்பகம், ர் ½, அரச தொடர்மாடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xii, 93 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ.
மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அங்கையன் கயிலாசநாதன் (வை.அ.கயிலாசநாதன் 14.8.1942-5.4.1976) 34 ஆண்டுகளே வாழ்ந்து வாகன விபத்தில் மறைந்துவிட்டபோதிலும், இன்றும் அவரது படைப்புகளால் நினைவுகூரப்படுபவர். பல்வேறு கலை இலக்கியத் துறைகளில் தடம் பதித்தவர். அச்சுக்கலை, பத்திரிகைத் துறை, ஒலிபரப்புத் துறை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் சம்பந்தப்பட்ட ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கடற்காற்று நாவல் பற்றி, நினைவாஞ்சலிகள் காலத்துக்குக் காலம், அங்கையன் கவிதைகள் பற்றி, அங்கையன் சிறுகதைகள் பற்றி, செந்தணல் நாவல் பற்றி, சிட்டுக்குருவியும் வானம்பாடியும் நாவல் பற்றி, மறைந்து 25 வருங்கள் கழிந்தபின், அங்கையன் கயிலாசநாதன் படைப்புகள் (இலக்கியக் கருத்தரங்கில் கேட்டவை), ஏனைய சில தகவல்கள் ஆகிய ஒன்பது ஆக்கங்கள் இ.நாகராஜன், நவீனன், சில்லையூர் செல்வராசன், ரிஜ்வே திலகரத்ன, கே.எஸ்.நடராசா, என்.சண்முகலிங்கன், அ.சண்முகதாஸ், இ.முருகையன், கே.விஜயன், செ.யோகநாதன், கே.எஸ்.சிவகுமாரன், காவலூர் இராசதுரை, செங்கை ஆழியான், சி.சிவசேகரம், சுபத்ராமணியன், ஆகலைவன், மேமன்கவி, மு.தயாபரன், பத்மா சோமகாந்தன், மா.பாலசிங்கம் போன்ற பல்வேறு இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட கருத்துரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.