எம்.எம்.ஜெயசீலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2023, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxvi, 172 பக்கம், விலை: ரூபா 1900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-747-9.
இலக்கியங்களை விமர்சனக் கோட்பாடுகளின் பின்னணியில் நோக்குவது இந்நூலின் நோக்கமாகும். நாட்டார் வழக்காறு, காவியம், நாவல், சிறுகதை, தன் வரலாறு, கவிதை ஆகிய வடிவங்கள் மாற்று வரலாறு, எடுத்துரைப்பியல், தொன்மவியல், இனவரைவியல், சமூக வரலாற்று வரைவியல், பெண்ணியம் எனக் கோட்பாடுகள் சார்ந்து நோக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியை இருவகைகளில் நோக்கலாம். ஒன்று, கட்டுரையாசிரிருக்கான வாசிப்புத் தளம். இன்றைய இலக்கியச் சூழலில் நிலவும் கோட்பாடுகள் பற்றிய அறிகையை இற்றைப்படுத்தல் என்ற விடயத்தினூடாக அறிய முனைதலும் அதனை வெளிப்படுத்தலும். மற்றையது, அவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால் அறிவைப் பரப்பும் நோக்கில் தமது மாணவர்களை இலக்குக் குழுக்களாக இனங்கண்டு, அவர்களுக்கான புதிய திசைகளைச் சுட்டும் வகையில் அறிமுகக் குறிப்புகளாக எழுத முற்பட்டமை. அவ்வகையில் இந்நூலில் நாட்டார் வழக்காறும் மாற்று வரலாறும், எடுத்துரைப்பியல் நோக்கில் சிலப்பதிகாரம், தொன்மச் சிதைவும் கலையாக்க அரசியலும், இனவரைவியலும் நாவலும், ஒப்பந்தப் புலம்பெயர்வும் யுத்தகாலப் புலம்பெயர்வும், தன்வரலாற்று எழுதுகையும் சமூக வரலாற்று உருவாக்கமும், இலங்கைப் பெண் கவிதைகளில் ஆண்களும் அதிகாரமும் ஆகிய ஏழு இலக்கிய விமர்சன ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கண்டி, ரங்கலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.ஜெயசீலன், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.