ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை (மதராஸ்): ஒற்றுமை ஆபீஸ், இல.8, வியாசராவ் தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1941. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vii, 262 பக்கம், விலை: இந்திய ரூபா 1-8-0, அளவு: 19×13 சமீ.
தொகை நூல்கள் தமிழ்ச் சங்கத்தின் இறுதிக் காலத்தில் தொகுக்கப்பட்டனவென்பது ஐதீகம். இந்நூல்களில் சிலவற்றைத் தொகுத்தவர்களின் அல்லது தொகுப்பித்தவர்களின் பெயர்களும் கூறப்படுகின்றன. கலித்தொகை நூலைத் தொகுத்தவர் ஆசிரியர் நல்லந்துவனார் என்று நச்சினார்க்கினியர் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையிற் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் காணப்பட்ட ஒரு வெண்பாவை ஆதாரமாகக் கொண்டு பெருங்கடுங்கோன், கபிலர், மருதனிள நாகனார், சோழன் நல்லுத்திரன், நல்லந்துவனார் ஆகியோர் கலித்தொகையின் ஒவ்வொரு பகுதியைச் செய்தனர் என்று வழங்குகின்றது. இவ்வெண்பா பின்னாளில் இடைச்செருகப்பட்டதென்பாரும் உள்ளனர். இந்தச் சந்தேகத்திற்குக் காரணம் கலித்தொகைப் பாடல்களிற் பல ஒன்றை ஒன்று பார்த்துச் செய்யப்பட்டன போலவும் சொன்னதையே திரும்பச் சொல்வனவாகவும் காணப்படுவதாலாகும். கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0606).